ஆறு, குளம், கால்வாய் போன்ற நீர்நிலைகளில் வீடுகள் கட்ட அனுமதி இல்லை! – அரசாணை!

ஆறு, குளம், கால்வாய் போன்ற  நீர்நிலைகளில் வீடுகள் கட்ட அனுமதி இல்லை! – அரசாணை!

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:

தமிழ்நாடு நகரமைப்பு திட்டமிடல் சட்டம் 1971 – ன்கீழ் தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்  ஒழுங்குமுறை விதி 2017 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சியில் செயல்அதிகாரிகள், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிலங்களை வரையறை செய்வதற்கு தகுதியான அதிகாரிகள் ஆவார்.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் நிலத்தின் உரிமையாளர்க ளும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து தங்களது நிலத்தை வரையறை செய்துகொள்ளலாம்.

இந்த நிலங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ம்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளாக இருக்க வேண்டும், இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும், அதன்படி மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 100 வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 60 என்றும், பேரூராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 30 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்,

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மேம்பாட்டு கட்டணமாக மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 600ம் சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 350 ம்  முதல் மற்றும் 2 ம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 250ம் பேரூராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ 150ம் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சதுர மீட்டருக்கு ரூ 100ம் செலுத்த வேண்டும்

இது தவிர வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சி என்றால் குறைந்தது 4.8 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்க வேண்டும்,. நகராட்சி மற்றும் கிராம பஞ்சாய்த்து பகுதிகளில் குறைந்தது, 3.6 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்க வேண்டும், வீட்டுமனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் திறந்தவெளி பொது நிலத்தை விட வேண்டும். இந்த திறந்தவெளி பொதுநிலம் விடாமல், வீட்டுமனைகள் அமைக்கப்பட்டிருந்தால், அந்த ஒட்டுமொத்த வீட்டுமனைகளின் மதிப்பில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த வீட்டுமனைகளை வரையறை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஒரு வீட்டுமனைக்கு ரூ 500 என்ற வீதம் கட்டணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க வேண்டும்,. அதன் பின்னர் ஆய்வுகளை செய்ய வேண்டும்,. இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை இந்த புதிய வீதிகளின்படி கட்டணம் வசூலித்து வரையறை செய்வதால் அந்த வீட்டுமனையில் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களையும் வரையறை செய்ததாக அர்த்தம் இல்லை.

இந்த அங்கீகாரம் இல்லாத சட்டவிரோத கட்டடங்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை சட்டப்படி மேற்கொள்ள உரிமை உள்ளது. இனி வரும் காலங்களில் வீட்டுமனைகளை அமைக்கும்போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்,

அதாவது விவசாய நிலம் நீர்நிலைகள் அல்லது அந்த நீர் நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலம் அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் வீட்டு மனைகளை உருவாக்க அனுமதி வழங்ககூடாது. வீட்டுமனைகளை உருவாக்கும் நபர்கள்  இது குறித்து மாவட்ட கலெக்டர் மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த அதிகாரிகள் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன்பின்னர் உரிய விதிகளை பின்பற்றி வீட்டுமனைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீடுகள் கட்டுவதற்கு மாற்றக்கூடாது. அரசு நிலம், கோவில் நிலம், வக்பு வாரிய நிலம் ஆகியவற்றிலும் வீடு கட்டிடம் கட்ட அனுமதி இல்லை.

உரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு அனுமதி கிடையாது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரையறுத்து, அங்கீகரி்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு வேளாண் இணை இயக்குனரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!