அப்படியே சரியும் அஞ்சல் தலை விற்பனை!
நம் நாட்டில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வரும் ஸ்டாம்ப் எனப்படும் அஞ்சல் தலைகளின் விற்பனை கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு சரிவு அடைந்துள்ளது.
அஞ்சல், பார்சல்கள் அனுப்புவதற்கு அஞ்சல் தலைகள் ஒட்ட வேண்டும். உலகளவில் ஒரு சில நாடுகள் அஞ்சல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமின்றி, சேகரிப்பாளர்களுக்காகவே அஞ்சல் தலைகளை வெளியிடுகின்றன.இது, அந்த நாடுகளின் வருமானத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாக இருப்பதும் காரணமாகவும் உள்ளது. இதனால், சேவை, வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் அஞ்சல் தலைகள் முக்கிய இடம் பெறுகின்றன. வருமானத்தில் முக்கியப் பங்கு:இந்திய அஞ்சல் துறையின் பாரம்பரியச் சேவைகளில், அஞ்சல் தலை விற்பனை முக்கிய இடம் வகிக்கிறது. இதன் விற்பனை பிரதான இடம் வகிக்கிறது.
இந்தியாவில் 1854-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அஞ்சல் தலை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக, பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசிய விலங்குகள், பறவைகள், முக்கிய நிகழ்வுகள், பழம்பெரும் அரசியல் தலைவர்களின் சாதனை போன்றவற்றை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது விசேஷ அஞ்சல் தலைகளை அச்சிட்டு வெளி யிடுகிறது. இருப்பினும்,தகவல் தொழில் நுட்பப் புரட்சி அஞ்சல், அஞ்சல் தலைகள் பயன்பாட்டை குறைத் துள்ளது.குறிப்பாக செல்லிடப்பேசி, இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியால் இ-மெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களின் பெருக்கம் ஆகியவற்றால், இளம் தலைமுறையினர் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கம் அருகி வருகிறது.
இப்படி அஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதால், அஞ்சல் தலை பயன்பாடு, விற்பனையும் பெருமளவில் குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், அஞ்சல் தலைகள் விற்பனை 50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என, இந்திய அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள்,” 2013-14ஆம் ஆண்டில் ரூ.670.7 கோடிக்கும், 2014-15-இல் ரூ.576.2 கோடிக்கும், 2015-16-இல் நவம்பர் வரை ரூ.345.7 கோடிக்கும் அஞ்சல் தலைகள் விற்பனையாகி உள்ளன.நஇவற்றை ஒப்பிடும் போது, அஞ்சல் தலை விற்பனை வாயிலாகக் கிடைக்கும் வருவாயானது பாதியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பார்சல் மூலம் கிடைக்கும் வருவாயானது, அக்டோபர் வரை (2015) 117 சதவீதம் உயர்ந்துள்ளது என்றனர்.