பழ. நெடுமாறன் ஆவணத்தை அடிப்படையாக்க் கொண்டு தயாராகும் ‘ பிரபாகரன்’
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தமிழில் சினிமா படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை “மகிழ்ச்சி” படத்தை இயக்கிய வ.கவுதமன் இயக்குகிறார்.
இது குறித்து இயக்குனர் கவுதமன் கூறுகையில், “ராஜாராஜசோழனுக்கு பிறகு தமிழனின் வீரத்தையும், மானத்தையும் தலைநிமிர செய்தபெருமை பிரபாகரனையே சேரும்.பிரபாகரனின் வாழ்க்கையை நெடுமாறன் எழுதிய ஆவண புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படமாக எடுக்க உள்ளேன்.
உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி.
அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனுபவித்துள்ளார்கள்.நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலைக்காக போராடிய நம் இனம். உலகின் பெரும் வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து நம்மை சிதைத்துள்ளன.
ஆனால் அது அத்தனையையும் தவிடுபொடியாக்கியது நம் அண்ணன் பிரபாகரன் படை.ராஐராஐ சோழனுக்குப் பிறகு தமிழனின் வீரத்தையும் மானத்தையும் தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்றினை ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் “எனும் புத்தகத்தின் வாயிலாக படித்தறியும் பொழுது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைக்கும் சிலிர்த்தது.
மேலும் அப்புத்தகம் என்னை அழ வைத்தது. தமிழரின் நிலை எண்ணி கலங்க வைத்தது. சொல்ல முடியாத கோபத்தை உண்டுபண்ணியது. உலகத்தில் எத்தனையோ மன்னர்கள் இந்த மண்ணை ஆண்டுள்ளனர்.
அனால் அவர்களில் எத்தனைபேர் நேர்மையாக ஆண்டார்கள்,
எத்தனைபேர் மக்களுக்காக உண்மையாக பணிபுரிந்தார்கள் என பார்க்கும் பொழுது உலகம் தோன்றிய காலத்திலிருந்து இனி மறையப்போகிற காலம் வரையிலும் ஒரு உன்னதமான மன்னன், மக்களை நேசித்த அரசு, ஈழம்தான்.அந்த அற்புதத்தை ஒரு படைப்பாக தருவதற்கு நான் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றேன்.
என்னுடைய “சந்தனக்காடு” தொடர் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.தன்னை காப்பாற்ற ஓடிய ஒருவருடைய வாழ்கையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், ஒரு தனிமனிதன் அல்ல, ஒரு தெரு அல்ல, ஒரு ஊர் அல்ல, ஒருதேசமே தியாகம் செய்திருக்கின்றது.தங்கள் உரிமைக்காகாவும் தங்களின் விடுதலைக்காகவும்.
அப்படிப்பட்ட பரிசுத்தமான தியாகத்தை, ஐயா நெடுமாறன் அவர்கள் எழுதிய ஆவணப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதில் பயணம் செய்து இந்த திரைப்படத்தை தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் தமிழினத்தின் தியாகத்தையும், வீரத்தையும் காண்பிக்கவுள்ளேன்.இந்தப் படைப்பு வெளி வருவதற்கும், அதனை செய்து முடிப்பதற்கும், உலகத் தமிழினம் பெருத்த ஆதரவு வழங்க வேண்டும் என்று ஒரு படைப்பாளியாக, ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.