காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை
இந்தியாவில் காற்று மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கூறுகையில், இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. கடந்த 2006 – 2015 இடைப்பட்ட ஆண்டுகளில் சுவாச நோய் உள்ளிட்ட காரணங்களால் 35,616 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.காற்று மாசுக்கு உலகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக கடந்த மே மாதம் உலகச் சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும்
இந்நிலையில் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வாஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கத்தின் (AAAS) ஆண்டு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது காற்று மாசு குறித்த சர்வதேச குழுவின் ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் வரும் ஆண்டுகளில் உயிரிழப்பின் சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்த அய்வறிக்கை குறித்து கனடாவின் வான்கூவரில் உள்ள பொது சுகாதார மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் தொகை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் உயிரிழப்புகள் அதிகம் நடப்பதற்கான நான்காவது காரணியாக காற்று மாசு உருவாகிவிட்டது. இதனால் நோய்கள் எளிதாக உருவாகுவதற்கும் அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.பொது மக்களின் உடல்நலத்தை மேம்படுத்த வேண்டுமெனில், காற்று மாசு ஏற்படுவதை நிச்சயம் குறைத்தாக வேண்டும். அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, அதிகப்படியான நிலக்கரியை எரிப்பதால் உண்டாகும் கரும்புகை ஆகியவை தான் காற்றில் கலந்து காற்று மாசு ஏற்பட காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் சமையலுக்காக மரங்கள் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் மிகப் பெரிய அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்