‘இந்து’-ன்னாலே – அப்பாவை விட அம்மாதான் மெயின்! -சபரிமலை Vs லேடீஸ் விவகாரத்தில் கோர்ட்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் வயது வரம்பு இன்றி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு மற்றும் 5 பெண் வக்கீல்கள் 2006–ம் ஆண்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.ந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
ஆலய நிர்வாகம் தரப்பில் மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் “இந்தியாவின் மிகவும் புனிதமான சபரிமலை ஆலயத்தில் பெண்கள் நுழைவதை தடுப்பது பாலின நீதி ஆபத்தில் உள்ளதையே காட்டுகிறது. கடவுளை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். கடவுள் விக்கிரக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் பெண் என்பதால் அந்த விக்கிரகம் உள்ள கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று நம்மால் கூறமுடியுமா?நான் கடவுள் நம்பிக்கை உடையவன், நான் கோவிலுக்கு சென்று தலைதாழ்த்தி வணங்குகிறேன். நீங்கள் என்னை வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?
பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று உங்களால் மறுக்க முடியுமா? எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்வதற்கான காரணம் அனைவருக்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும், அரசியல் சட்டத்தின் அடித்தளமானதாகவும் இருக்க வேண்டும்.எந்த உரிமையின் கீழ் அவர்கள் ஒரு பெண்ணை பொது இடமான கோவிலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். தேவசம் போர்டின் இந்த தடை உத்தரவை அரசியல் சட்டத்தின் எந்த கொள்கை ஆதரிக்கிறது? பாரம்பரிய நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தின் கோட்பாடுகளை மீறியதாக இருக்கக்கூடாது.இந்து பாரம்பரியத்தில் தந்தையைவிட தாய் தான் மிகவும் போற்றப்படுகிறார். எனவே பெண்கள் கோவில்களுக்குள் நுழைவதை தடுக்க முடியாது” என்று நீதிபதிகள் கூறினார்கள்.
இந்த வழக்கின் மீதான விசாரணையை 20–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.