உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு ஹைலைட்ஸ்!

உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு  ஹைலைட்ஸ்!

உலக வரலாற்றில் ஒரு சிலர் தான் சரித்திரத்தை உருவாக்குவார்கள், அதில் இடம்பெறுவார்கள். அப்படியாக உலக வரலாற்றில் சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் நடித்த திரைப்படத்தின் காட்சி அமைப்புகள், உரையாடல்கள், பாடல்கள், கதையம்சங்கள் என எதை எடுத்தாலும் வாழ்வியலுக்கான ஆய்வுக்குரியது. அப்பேர்பட்டவரின் சாதனையை இன்றைய தலைமுறை  யினரும் முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை தொடங் கியது. மாநாட்டு கொடியை பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஸீனா (ஜேப்பியார் மகள்), முருக பத்மநாபன், எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா, முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம் உள்ளிட்டோரும் குத்துவிளக்கேற்றினர்.

அதைத்தொடர்ந்து பேச்சுப்போட்டி, எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. கவிஞர்கள் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இசையமுது, பூங்குழலி, அசோக், சுப்பிரமணி, ரவிபாரதி மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். ‘மேயர் சைதை துரைசாமியின் 5 ஆண்டு கால பணிகள்’ என்னும் எஸ்.கே.முருகன் எழுதிய ஆய்வு நூலையும், சைதை துரைசாமி தயாரித்த ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற நூலையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இதனை முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து எம்.ஜி.ஆர். உடன் பணியாற்றியவர்கள், உதவியாளர்கள், உறவினர்கள் என அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய முகவரி ரமேஷ், காமாட்சி சுப்பிரமணியம், பாலம் கல்யாணசுந்தரம், லீலாவதி (எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கியவர்), டாக்டர் ராஜாமணி, பழனிசாமி, எம்.கே.ஆர்.ராஜா, டாக்டர் சமரசம், ப.மோகன், மகாலிங்கம், துரை கர்ணா, எம்.பி.நிர்மல், துக்ளக் ரமேஷ், ஜே.பிரபாகரன், நெற்றிக்கண் மணி, மேகலா சித்திரைவேல், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி, சங்கரசுப்பு, போஸ், நடிகர்கள் விஜயகுமார், ராஜேஷ், பாக்யராஜ் ஆகியோர் கவர்னரால் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தூண், கவர்னரால் திறக்கப்பட்டது.

பின்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசிய போது, “எம்.ஜி.ஆர். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார். பல்வேறு புதிய மற்றும் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். இதுபோன்ற நிர்வாக சாதனைகளால் சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரை இன்றும் நேசித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரையிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலம் பள்ளி கல்வித்துறையில் சாதனை படைக்கும் சிறந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகமும் இணைந்திருக்கிறது. உயர்கல்வியில் அவர் கொண்டு வந்த கொள்கைரீதியான மாற்றம் காரணமாக 2 ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன.

துன்பப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய அவருடைய கவலை மிகவும் நேர்மையான ஒன்றாக இருந்தது. கர்ணனை பின்பற்றி பெருந்தன்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றால் ஒரு மாபெரும் கொடை வள்ளலாகவே எம்.ஜி.ஆர். வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர். அளித்த உதவியால் பலர் வக்கீல்கள், என்ஜினீயர்கள், டாக்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளாக உருவெடுத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். படங்களில் இல்லாதவர்கள் இல்லாத நிலையை அடையவேண்டும் என்பதையே எடுத்துக்கூறின. நீதி பாட்டுகள் மூலம் அரசியல் தகவல்களை தெரிவித்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அரும்பாடு பட்டார். உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

எம்.ஜி.ஆர்., மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் வாழ்க்கை முழுவதும் சேவையாக செய்து, முன் மாதிரி தலைவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை வருங்கால தலைமுறை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கவர்னர் தெரிவித்தார்.

விழாவில் ஐசரி கணேஷ் பேசும்போது, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் இருக்கை அமைக்கப்படும். கவர்னர் கையால் அந்த இருக்கை தொடங்கி வைக்கப்படும் என்றார்.

எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியில் அவர் பயன்படுத்திய கார், தொப்பி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் சங்கர் கணேசின் இசை நிகழ்ச்சி, திரைப்பட சண்டை பயிற்சி நிபுணர் ஜாக்குவார் தங்கம் குழுவினரின் வீர விளையாட்டு சாகசங்களும் நடந்தது.

மாநாட்டில் இலங்கை கல்வித்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், எம்.ஜி.ஆரின் உடை அலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, நடிகை லதா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசியபோது,”இங்கு கூடியுள்ளவர்கள் எம்.ஜி.ஆரால் பயன்பெற்றவர்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பயன்பட்டவர்கள். இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகும் கூட ஒரு மனிதனின் பெயர் மங்காமல் இருக்கும் பாக்கியம் யாருக்கும் கிடைத்ததில்லை.

3-ம் வகுப்பை தாண்டாத மனிதர், தமிழுக்கு தமிழகத்தில் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு உயர்ந்தார். இன்றைக்கு அமெரிக்கா வரைக்கும் பொறியியல் படிப்பில் நம் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள் என்றால், அது எம்.ஜி.ஆர். போட்டுக்கொடுத்த கல்வித்திட்டத்தால் தான்.

எம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன். அவர் தனது சிறிய வயதில் சோற்றுக்கு கஷ்டப்பட்டவர். அதனால் தன்னை தேடி வரும் அனைவரையும் ‘சாப்பிட்டீங்களா?’, என்று கேட்பார். எம்.ஜி.ஆரை பற்றி பாட்டெழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எழுதியது, அவருக்கான இரங்கல் பாட்டு மட்டுமே”இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மாலையில் கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

சைதை துரைசாமி, ஏசி சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோர் ஆடியோவை வெளியிட நடிகர்கள் பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சைதை துரைசாமி முன்மொழிந்து வாசித்தார்.

தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* மும்பை ரெயில் நிலையத்துக்கு ‘சத்ரபதி சிவாஜி’ பெயர் சூட்டியது போன்று, எம்.ஜி.ஆரின் பெயரை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மத்திய அரசு சூட்ட வேண்டும்.

* வருகிற ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.

* எம்.ஜி.ஆரை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், அவரை பற்றிய அனைத்து ஆவணங்களையும் முழுமையாக திரட்டி காலப்பெட்டகமாக பாதுகாத்திட வேண்டும்.

* எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ந் தேதியை மனிதநேய நாளாக அறிவித்து அரசு ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!