இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீராங்கனைகள்!
இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பெண் விமானிகளை பணியில் ஈடுபடுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் முதன்முறையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்படையின் இயக்குநர் கிருஷ்ண சவுத்ரி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு துவக்கத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண்களுக்கு போரிடும் ஆற்றல், ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதம் மற்றும் மலையேற்றம் குறித்து 44 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்கள் சீனாவை ஒட்டிய பகுதிகளான இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் பணியாற்றவுள்ள இடங்கள் கடுமையான பருவநிலை மாற்றம் கொண்டதாகவும், மலைப் பாங்கான நிலப்பரப்பு கொண்டதாகவும் இருக்கும்.இங்கு அமைந்துள்ள முகாம்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,000 – 14,000 அடி உயரத்தில் உள்ளன. இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய எல்லையின் கடைசி கிராமமான ‛மனா’ மலையில் உள்ள முகாமும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.