“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?” – கார்த்தி சிதம்பரம் காட்டம்!
கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ளது. அந்த லுக் அவுட் நோட்டீசில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை தீவிரமான நிலையில் கடந்த மே மாதம் தன் நண்பர்களுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். ஜூன் 1-ந்தேதி அவர் நாடு திரும்பினார். மீண்டும் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?” என கார்த்தி சிதம்பரம் கேள்விஎழுப்பியுள்ளார். சொந்த ஊரான காரைக்குடியில்தான் இருப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை என்பது போன்ற படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வகையிலான புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.