பருவமழை இப்பவும் குறைவாதான் பெய்யும்! – பீ கேர்ஃபுல் – மாநிலங்களுக்கு வார்னிங் லட்டர்!
காரணம் பலவாக இருந்தாலும் நம் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து நாட்டில் போதுமான மழை பெய்யாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றி வருகிறது என்பது என்னவோ உண்மை.. குறிப்பாக போன இரண்டு வருஷங்களாக இயல்பான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையிலும் பல்வேறு மாநிலங்களில் போதுமான மழை கிடையாது, இயல்பைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்து கடும் வறட்சி நிலை இன்றளவும் இருக்கிறது. இத்தனிக்கும் கடந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழையும் இயல்பு நிலையில் இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அது போதுமான மழையை பொழியவில்லை. கடந்த ஆண்டு 107 சதவீதம் மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த போதிலும், 97 சதவீதம் மட்டுமே பெய்ததெல்லம் தெரியும்.
இந்நிலையில் இந்த ஆண்டும் பருவமழை சீசனில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருக்கும் எனவும், வறட்சிக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதாவ்து இந்த ஆண்டில் ஜூன் – செப்டம்பர் பருவமழை சீசனில் நீண்ட கால அளவிலான சராசரி மழைப்பொழிவு 96 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 5 சதவிகிதம் குறைவாகவும் இருக்க வாய்ப்புள்ளது. வானிலை குறித்து அதன் இயக்குநர் கே.ஜே. ரமேஷ் டெல்லியில் கூறுகையில், “ இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். பரவலாக நாடு முழுவதும் மழை பொழிவு இருக்கும். நீண்ட கால சராசரியில் இந்த ஆண்டு 96 சதவீதம் மழை இருக்கும்’’ எனத் தெரிவித்தார். நீண்டகால சராசரி 96 சதவீதம் முதல் 104 வரை இருந்தால் இயல்பான மழை, 104 முதல் 110 வரை இருந்தால், இயல்பைக் காட்டிலும் நல்ல மழை, 96 சதவீதத்துக்கும் குறைந்தால் அது இயல்பைக் காட்டிலும் குறைவான மழையாகும்.
இதனிடையே, இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பிலிருந்து உறுதியான மழை பொழிவு அளவு குறித்த அறிக்கை வெளியாகும். இந்தப் பருவமழை சீசனின் போது மழை அளவு குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு விவசாயிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், ‘குறைந்த அளவிலேயே மழைப் பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் கையிலெடுக்க வேண்டும். விதைப்புக்குத் தேவையான விதைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா, என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். மழையால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் உள்ள வறட்சி மேம்பாட்டு மையத்தைச் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு, வறட்சி பாதிப்பைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கான நிவாரணம் வழங்கிட வேண்டும். பிரதம அமைச்சரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வறட்சி பாதிப்புக்கு ஏற்ற நிவாரணம் விவசாயிகளுக்குக் கிடைக்கப்பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் சராசரி பருவமழை அளவு 89 செ.மீ. ஆக உள்ளது. இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக, 96 செ.மீ. அளவிற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் விவசாய உற்பத்தி 15 சதவீதம் வரை அதிகரிக்கக்க்கூடும்.” என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது