பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!
வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும், ஒருமுறை பயன் படுத்தக்கூடிய 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்குவதற்கான இயந்திரம் நிறுவப்படும். இதனை பயன்படுத்தும் பயணிகளுக்கு இலவசமாக மொபைல் ரீசார்ஜ் செய்யப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என பிரதமர் மோடி தன் 73-வது சுதந்திர தின உரையில் வலியுறுத்தினார்.
இதை செயல்படுத்தும் வகையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 50 மைக்ரான்களுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்தத் தடை உத்தரவு அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சென்ற ஆகஸ்ட் மாதம் இந்திய ரயில்வே அறிவித்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே போர்ட் தலைவர் வி.கே. யாதவ் நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது 128 ரயில் நிலையங்களில் 160 பிளாஸ்டிக் பாட்டில்கள் நசுக்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டுள்ளன. பயணிகள் தங்களது பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த இயந்திரத்தில் வைத்தால் அது தானாக நசுக்கி பொடியாக்கிவிடும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு அவர்களின் மொபைல்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும்.
இயந்திரத்தை பயன்படுத்த விரும்பும் பயணிகள் அவரது மொபைல் எண்ணை இயந்திரத்தில் டைப் செய்ய வேண்டும். பிறகு அவருக்கு உடனடியாக ரீசார்ஜ் செய்யப்படும் என ரயில்வே போர்ட் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார்.
எவ்வளவு தொகை ரீசார்ஜ் செய்யப்படும் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ரயில் நிலையங்களில் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வி.கே. யாதவ் கூறினார்.