விக்ரம் சாராபாய் பிறந்த தினம் ஆகஸ்ட் 12, 1919

விக்ரம் சாராபாய் பிறந்த தினம் ஆகஸ்ட் 12, 1919

** பாரத விண்வெளிப் பயணப் பிதா

** இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை

** இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர்.

** ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை.

vikram aug 12

விக்ரம் சாராபாய் 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பிறந்தார்.இவர் ஒரு பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தார்.இயற்பெயர் விக்கிரம் அம்பாலால் சாராபாய்.இவரின் தாயார் சரலாதேவி.தாயர் நடத்திய தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக் கல்வி பயன்றார்.குஜராத் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.இவர் இயற்கை அறிவியலின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.மேற்படிப்புக்கு 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் ஸெயின்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்தார்.இவர் இயற்கை விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால் அவசரமாக இந்தியா திரும்பினார்.இந்தியாவுக்குத் திரும்பிய விக்ரம் சாராபாய் பெங்களூருவிலுள்ள இந்திய விஞ்ஞான நிலையத்தில் சேர்ந்தார். இயற்பியல் அறிஞர் சர் சி வி ராமனின் மாணவனாக இந்திய விஞ்ஞான கழக்கத்தில் பயிற்சி மேற்கொண்டார்.சர்சிவி ராமன் வழிகாட்டுதலில் மின்காந்த நுண்ணலைகளின் விளைவுகள் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.அங்கு டாக்டர் ஹோமி பாபாவை விக்ரம் சந்தித்தார்.இவர்கள் இருவரின் சந்திப்புக்கு பிறகு அறிவியலின் நுணுக்கங்களை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. விஞ்ஞான கழகத்தில் இவருக்கு அகிலகதிர் மேஸான் போன்ற பல்வேறுபட்ட பாடங்களும் ஆராய்ச்சிகளுக்கான நுணுக்கங்களும் பயிற்றுவிக்கபட்டன.

உலகப் போர் முடிந்த பிறகு மீண்டும் இவர் இங்கிலாந்துக்கு சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.இவர் இந்தியா திரும்பினார். இவர் மிருனாளினி என்ற நாட்டிய கலா மேதையான பெண்னைக் கலப்புமணம் புரிந்தார்.கலைத்துவக் கலாச்சாரத்தில் மிகவும் ஈடுபாடுள்ள இவரும் இவரது மனைவி மிருனாளினியும் சேர்ந்து தர்பனா கலைக்கூடத்தை அமைத்து பாரத நாட்டின் ஆரம்ப கால கலைகள் புத்துயிர் பெற நிகழ்ச்சிகள் நடத்தினர்.

தமது 23 வயதில் இமயமலைக்கு சென்று அண்டக்கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை நடத்தினார் விக்கிரம். அந்த ஆய்வுகள் இவருக்கு மிகவும் பிடித்தது.அங்கு ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவினார்,1947ல் அகமதாபாத்தில் இயற்பியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். அங்கு தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.அதே ஆண்டு அகமதாபாத் ஜவுளி ஆலை ஆய்வுச் சங்கத்தை நிறுவினார்.1947 ல் இருந்து 1956ஆம் ஆண்டு வரை அதன் ஆணையராகச் செயல்பட்டார்.1955ல் காஸ்மீரில் குலுமார்கில் இதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.

1957ல் அகமதாபாத் மேலாண்மைச் சங்கம், சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் எஞ்சினியரிங் எனப் பல தொழிற்சாலைகளை நிறுவினார்.இவர் அகமதாபாத்தில் இந்திய மேலாண்மை நிலையம்(Indian Institute of Management) என்ற கல்வி மையத்தை தொடங்கினார்.1962இல் இருந்து 1965 வரை சாராபாய் இதன் ஆணையாளராக இருந்தார்.இந்த கல்வி நிலையம் இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற கல்வி நிலையங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

1962ல் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழுவை நிறுவி அதன் தலைவராக விக்ரம் சாராபாயை நியமித்தார்.முதல் திட்டமாக தும்பா நடுநிலைக் கோடு ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டது. தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது

ராக்கெட், ஏவு வாகனம், ஆளில்லா உளவு விமானம், செயற்கைக்கோள் ஆகியவற்றின் வடிவமைப்பு, சோதனை மற்றும் ஏவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட் மாதரியை செய்து பல்வேறு அங்கங்களை இணைத்தார்.அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார். அடுத்து செயற்கைத் துணைக்கோள் ஏவும் திட்டத்தை வகுத்தார். அப்பணிகளில் இவருடன் உழைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

1963ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளிப் புரட்சி சிறிய அளவிலே ஆரம்பம் ஆனது.1963 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் [Sodium Vapour Release Payload] சுமந்து கொண்டு 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது.

இவர் துணைக் கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார். 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார்.

இவர் 1965இல் அகமதாபாத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பரப்ப சமூக விஞ்ஞான மையத்தை [Community Science Centre] நிறுவினார்.கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor (FBTR),கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம் இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கினார்.

1966ம் ஆண்டு பன்னாட்டு அணுவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வியன்னாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது ஆல்ஃப்ஸ் மலைத் தொடரில் விமானம் மோதி ஹோமி பாபா மரணமடைந்தார். ஹோமி பாபா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர விக்ரம் சாராபாயை அழைத்தார் இந்திர காந்தி. இந்திர காந்தி இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் பொறுப்பையும் வழங்கினார். விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளின் தலைவர் பொறுப்புகளில் விக்ரம் சாராபாய் திறம்படச் செயலாற்றினார்.

1968ல் விண்வெளி ஆய்வு மற்றும் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970ல் வியன்னாவில் நடைபெற்ற பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைவராகவும் அணுசக்தியின் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு மாநாட்டின் துணைத் தலைவராகவும் தேர்வானார்.

இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை(ISRO) விரிவாக்கினார்.இவர் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் .ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை.

திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிடச் சென்றபோது, தூக்கத்திலேயே இவர் உயிர் பிரிந்தது. இவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது மர்மமாகவே போய்விட்டது.

இவர் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி தமது 52 ஆம் அகவையில் மறைந்தார்.

விருதுகள்

** பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி இந்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தியது.

** நிலவிலுள்ள அமைதிக்கடல்(Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

** திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதள மையம் இவரது நினைவைப் போற்றும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!