விஜய் நடித்த மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா (முழு பேச்சு) அப்டேட்!

விஜய் நடித்த மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா (முழு பேச்சு) அப்டேட்!

விஜய்-இயக்குனர் அட்லி மீண்டும் இணைந்துள்ள படம் ‘மெர்சல்’. 3 வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்பட பலர் நடிக்கிறார்கள். தேனாண்டாள் பிலிம்சின் 100-வது படமான இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இத்துடன் விஜய், ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுக்கு வந்த 25-வது ஆண்டு விழாவையும் சேர்த்து பிரமாண்டமாக கொண்டாடினார்கள். இதில் ஏ.ஆர்.ரகுமான் இசை குழுவினரால் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் பாடப்பட்டன. நடன நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், அட்லி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் சுந்தர் சி., பார்த்திபன், சமந்தா, காஜல் அகர்வால், தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, ஹேமா ருக்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசிய போது, “தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது ஆண்டாகவும் அமைத்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன்.விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.

ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தனுஷ் பேசினார்.

இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா பேசும் போது, “குஷி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். குஷி படத்தில் நடிக்கும் போது விஜய் எப்படி இருந்தாரோ, தற்போதும் அப்படியே இருக்கிறார். எனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக இருந்தாலும், வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் அவரது பங்களிப்பு பெரிதாக இருக்கும். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் நமது மண்ணின் மைந்தன் மதுரக்காரனாக வருகிறார். மெர்சல் படம் வெற்றி பெறுவதற்கு அந்த கதாபாத்திரம் ஒன்றே போதும்” என்று கூறினார்.

இவ்விழாவில் இயக்குநர் அட்லீ பேசிய போது, “ஒருத்தன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைவிட, எவ்வளவு பேரை சம்பாதிக்கிறான் என்பது முக்கியம். உங்களுடைய கைதட்டல்களை சம்பாதித்துள்ளதில் சந்தோஷம்.’மெர்சல்’ உருவாவதற்கு ஒரே ஒருவர்தான் காரணம். எனது அண்ணன், தளபதி விஜய் சார் மட்டுமே. அவரோடு நெருங்கிப் பணிபுரிந்து வருவதால் எனக்கு உங்களை எல்லாம் விட இன்னும் நன்றாகத் தெரியும். இதுவரை என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர். அவரால் தான் ‘மெர்சல்’ கிடைத்தது. அதற்கு அவருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்தப் படத்துக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டது. ஏனென்றால் ‘தெறி’ மாதிரி ஒரு படம் செய்துவிட்டு, அதைத் தாண்டி ஒரு படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான். ‘தெறி’யில் 5 சண்டைக்காட்சிகள் இருந்தது என்றால், இதில் 13-14 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலுமே ஒரு பெரிய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு விஜய் அண்ணாவுக்கு நன்றி.

விஜய் அண்ணாவின் முழுமையான முயற்சியை ‘மெர்சல்’ படப்பிடிப்பில் பார்த்தேன். ராஜஸ்தானில், ஏப்ரலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது 50 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டியது. அத்தகைய வெயிலை சமாளிப்பது அந்த ஊர்க்காரர்களுக்கே கடினம். அந்த இடத்தில் திறந்த வெளி மைதானத்தில் 3000 பேரோடு விஜயை வைத்து படப்பிடிப்பு செய்தேன். அவரைப் போன்றதொரு நடிகரைப் பார்த்ததில்லை. அவர் நினைத்தால் மாஸாக வசனம் பேசிப் போய்விடலாம். அதைத் தாண்டி ஏதாவது ஒரு விஷயம் செய்து திருப்திப்படுத்த வேண்டும் என்று அவருடைய மனதில் இருக்கிறது. இவற்றை எல்லாம்விட இப்படத்தின் 100-வது நாள் விழாவில் இன்னும் நிறைய சொல்கிறேன்.

ராமநாராயணன் சார் நிறுவனத்தின் 100-வது படத்துக்கு என்னால் எவ்வளவு உழைப்பு தர முடியுமோ, தர வேண்டும் என நினைத்தேன். முரளி சாரைப் போன்றதொரு தயாரிப்பாளரை இனிமேல் சந்திப்பேனா என்று தெரியவில்லை.அதே போன்று முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சாரோடு பணிபுரிய வேண்டும் என்று பேப்பரிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். அது 3-வது படத்திலேயே அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

படத்தில் விஜய் சாருக்கு 3 வேடங்களா என கேட்காதீர்கள். ஆனால் 3 கதாநாயகிகள் இருக்கின்றனர் . வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் சாரைப் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்”இவ்வாறு அட்லீ பேசினார்.

இவ்விழாவில் விஜய் பேசிய போது, “இப்படத்தின் தயாரிப்பாளர் முரளி சாருக்கும் அவருடைய மனைவி ஹேமா அவர்களுக்கும் வாழ்த்துகள். அவர்களுடைய நிறுவனத்தின் 100-வது படமாக ‘மெர்சல்’ அமைந்ததில் எங்கள் படக்குழு அனைவருக்குமே சந்தோஷம். இவ்விழாவில் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவர் திரையுலகிற்கு வந்து இது 25-வருடம். அவரோடு சேர்ந்து பணியாற்றியது ரொம்ப ஸ்பெஷல். பாடல்களுக்கு மெட்டுப் போட்டு ஆஸ்கர் விருது வாங்கி, உலகத்தையே மெர்சலாக்கியவர் இன்று ‘மெர்சல்’ படத்துக்கு மெட்டுப் போட்டுள்ளார். பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அது எப்படியிருந்தது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எனக்கு ஒவ்வொரு பாடலையும் கேட்கும் போது சுகமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு நன்றி.

 

‘தெறி’ கொடுத்தமைக்கு நன்றி அட்லீ. இப்படத்தில் பணிபுரியும் போது மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. அட்லீயின் நிறைய விஷயங்களை ரசிப்பேன். அவருடைய நம்பிக்கையை ரொம்பவே ரசிப்பேன். இவ்வளவு பெரிய படத்தை 6 முதல் 7 மாதங்களில் சரியாக திட்டமிட்டு முடிந்தது ரொம்பவே பெரிய விஷயம். அட்லீக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி. விஷ்ணுவின் விளக்குகள் அமைப்பு எல்லாம் பார்க்கும் போது முதல் பட ஒளிப்பதிவாளர் மாதிரியே தெரியவில்லை. எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு உள்ளிட்ட பலருடைய ஒத்துழைப்பால் மட்டுமே இந்தப் படம் இவ்வளவு அழகாக முடிந்தது. சமந்தா, காஜல், நித்யா மேனன், சத்யராஜ் சார், வடிவேலு சார், எஸ்.ஜே.சூர்யா சார், கோவை சரளா மேடம், யோகி பாபு, ராஜேந்திரன் அண்ணா, சத்யன், அப்துல் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.

இப்போது சில விஷயங்கள் பேசியாக வேண்டும். அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. எனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். வெளியூர் செல்லும் போது ரசிகர்களையும், நண்பர்களையும் சந்திப்பேன். அப்போது நிறைய விஷயங்கள் என்னோடு பேசுவார்கள், விவாதிப்பார்கள். பலரும் என்னைச் சுற்றியிருக்கும் எதிர்மறை விஷயங்களை எப்படி கையாள்கிறீர்கள் என கேட்பார்கள். அதை தவிர்த்துவிட்டு, உங்களுடைய வேலையை மட்டும் பார்த்துவிட்டு போய் கொண்டே இருங்கள். கத்தி கத்திப் பார்த்துவிட்டு சோர்ந்து போய்விடுவார்கள். இது எனது வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளதால் சொல்கிறேன். தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டு ஏன்? வேண்டாம் நண்பா.

அதே நேரத்தில் இந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக நம்மை வாழ விடமாட்டார்கள். 4-ம் பக்கத்திலும் நம்மை சோதித்துக் கொண்டே இருப்பார்கள். அதெல்லாம் தாண்டி தான் வந்தாக வேண்டும். அனைவருக்குமே நம்மைப் பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும். கொஞ்ச பேருக்காவது நம்மை பிடிக்கா விட்டால் மட்டுமே வாழ்க்கை ரொம்ப ஜாலியாக, சுவாரசியமாக இருக்கும்.

அழகும், ஆடம்பரமும் இந்தால் ஆயிரம் பேர் கூட ஆசையாக பழகுவார்கள். அன்பாக இருந்தால் பழகுகிற 10 பேர் கூட உண்மையாக இருப்பார்கள். நான் அன்பாக இருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஹிட், ப்ளாப், பிளாக்பஸ்டர் என அனைத்துமே கொடுத்து விட்டீர்கள் நண்பா. அதை எல்லாம் விட உங்களை சம்பாதித்ததையே பெரிதாக நினைக்கிறேன்.இரண்டு விஷயங்கள் நீங்கள் யார் என்பதை நிர்ணயிக்கும். ஒன்று, நீங்கள் நிர்கதியாக இருக்கும்போது உங்களுக்குள் இருக்கும் மன உறுதி மற்றொன்று உங்களிடம் சகலமும் இருக்கும்போது நீங்கள் நடந்து கொள்ளும் விதம். இதை கடைப்பிடிப்பது எளிது தான்.

ஒரு சின்ன கதை. இதய அறுவை சிகிச்சை டாக்டர், காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக்கிடம் கொடுத்தார். அந்த மெக்கானிக், ‘உங்களை மாதிரி தான் நான் வால்வு பொருத்துகிறேன். அடைப்புகளை நீக்குகிறேன். ஆனால், எனக்குக் கிடைக்காத பேரும், புகழும், பணமும் உங்களுக்கு மட் டும் கிடைக்கிறதே’ என்று கேட்டான். அதற்கு டாக்டர், ‘நீ சொல்றது சரி தான். அதையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டே இருக்கும் போது செய்து பார், புரியும்’ என்றார்.

நான் பேசுவது, செய்வது எல்லாம் பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். ஒரு பிரச்சினையும் இல்லை. இதை எல்லாம் என் மகனிடம் சொன்னால் கேட்க மாட்டான். உங்களிடம் மட்டும் தான் இதெல்லாம் பேச முடியும். இங்கு வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சகளுக்கு என்னுடைய நன்றி. இங்குப் பாடிய அத்தனை பாடகர்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் நன்றிகள், வாழ்த்துகள். துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும். கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும். தெறின்னா தெனாவட்டா இருக்கணும். மெர்சல்னா மிரட்டலா இருக்கணும்” என்று விஜய் தெரிவித்தார்.

error: Content is protected !!