அப்போலோ போய் முதல்வரை நான் ஏன் பார்க்கலை? – விஜயகாந்த் விளக்கம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க டெல்லி வரை சென்று போராடுவேன். மதுரையில் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தே தீருவேன். திமுக, அதிமுகவால் தான் தமிழகம் சீரழிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தன்னுடைய பேச்சின் இடையே, தான் எதற்காக அடிக்கடி கோபப்படுகிறேன் என்பதை குறிப்பிட்டார். அதாவது ‘இயற்கை யாகவே தவறுகளை தட்டிக் கேட்பவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். அடிக்கிற கை தான் அணைக்கும். கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமும் இருக்கும். அது போலத்தான் நானும். 5 ஆண்டுகள் மத்திய அரசில் திமுகவினர் பதவியில் இருந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்காக என்ன சாதித்தார்கள். இரண்டு கட்சிகளும் காசை கொடுத்து ஆட்சியை பிடிக்கின்றனர். நான் நாடகத்தனமாக இருக்க விரும்பாததால், முதல்வரை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை. ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் பதவியில் அமர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று பேசினார்.
திமுக தலவைர் கருணாநிதியை எனக்கு எப்போதும் பிடிக்கும், அவருடன் அறிக்கை போர் மட்டுமே நடத்தினேன் என விஜயகாந்த் கூறினார். மேலும், மக்கள் நலக் கூட்டணியுடன் சட்டசபை தேர்தலின் போது தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்திருந்தேன்.மக்கள் விரும்பாததால் அந்தக் கூட்டணியில் இருந்து மகிழ்ச்சியுடன் பிரிந்துவிட்டேன். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்