வாஸ்கோட காமா – கடல் வாணிகம் செய்து வரலாற்றில் இடம் பிடித்தவன்

வாஸ்கோட காமா – கடல் வாணிகம் செய்து வரலாற்றில் இடம் பிடித்தவன்

புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ அகலங்களை அலசுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பல நாடுகாணும் ஆர்வலர்களின் கவனம் இந்தியா பக்கமே இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை இந்தியாவில் மட்டுமே கிடைத்த பல பொருட்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்பினர். உதாரணத்திற்கு நவரத்தினகற்கள், மயிலிறகு, மிளகு, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்கள். முன்பெல்லாம் அந்தப்பொருட்கள் தரைமார்க்கமாகத்தான் ஐரோப்பாவுக்கு சென்று சேர முடிந்தது. வழியில் பல இடைத்தரகர்கள் இருந்ததாலும், தரைப்பயணம் நீண்டநெடியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாலும் அந்தப்பொருட்களின் விலை மிக அதிமாக இருந்தது. விமானமும் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம் அது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து விட்டால் வாணிபம் இன்னும் சுலபமாக இருக்கும் பொருட்களின் விலையும் நியாயமாக இருக்கும் என்பதுதான் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பியதன் மிகமுக்கியமான காரணமாக இருந்தது.

vaso dec 24

1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை நனவாக்கினார் ஒரு போர்ச்சுக்கீசிய நாடுகாண் ஆர்வலர். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து வரலாற்றில் தடம் பதித்த வாஸ்கோட காமா. 1460-ஆம் ஆண்டு போர்ச்சுக்கலின் Sines என்ற இடத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் வாஸ்கோட காமா. அவரது தந்தை Estevao da Gama ஒரு நாடுகாண் ஆர்வலராக இருந்தவர். இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயன்றவர்களில் அவரும் ஒருவர் ஆனால் அந்தக்கனவு நிறைவேறாமலேயே அவர் இறந்துபோனார். தன் கனவை தன் மகன் நனவாக்குவான் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. அவரது மறைவிற்கு பிறகு போர்ச்சுக்கீசிய மன்னர் இரண்டாம் John அந்தப் பணியை முடித்துத் தருமாறு வாஸ்கோட காமாவைக் கேட்டுக்கொண்டார்.

சிறந்த பள்ளியில் படித்த வாஸ்கோட காமா கடற்படை அதிகாரியாக சிலகாலம் பணியாற்றினார். எனவே இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்து வருமாறு மன்னர் தன்னை பணித்தபோது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செய்து முடிக்க புறப்பட்டார். 1497-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் போர்ச்சுக்கல் தலைநகர் (Lisbon) லிஸ்பனிலிருந்து நான்கு கப்பல்கள் புறப்பட்டன. Sao Gabriel, Sao Rafael, Berrio, starship எனப்பெயரிட அந்த நான்கு கப்பல்களில் மொத்தம் 170 பேர் வாஸ்கோட காமாவின் தலைமையில் இந்தியா நோக்கி புறப்பட்டனர். கிட்டதட்ட 90 நாட்கள் நிலத்தையே காணாமல் கடலில் பயணம் செய்த அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் ஆப்பிரிக்காவில் தென்கோடியிலுள்ள Cape of Good Hope-ஐ அடைந்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவின் கரையோரமாக வடக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கினர்.

போர்ச்சுக்கீசிய மொழியில் Natal என்றால் கிறிஸ்துமஸ் என்று பொருள். அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நெருங்கியபோது அவர்களின் கப்பல் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையோரம் சென்றது. அந்தப்பகுதிக்கு Natal என்று பெயரிட்டார் வாஸ்கோட காமா. அதே பெயரில் அந்த இடம் இன்றும் அழைக்கப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த Mombasa, Mozambique, Malindi போன்ற துறைகளில் தரையிறங்கினார் வாஸ்கோட காமா. தங்கள் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்க வந்தவர்கள் என்று கருதிய இஸ்லாமிய வர்த்தகர்கள் வாஸ்கோட காமாவை எதிரியாகப் பார்த்தனர். அவரது கப்பல்களையும் கைப்பற்ற முனைந்தனர். அவற்றையெல்லாம் முறியடித்ததோடு Malindi-யில் ஒரு குஜராத்தி மாலுமியை தன்னோடு சேர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார் வாஸ்கோட காமா. அந்த மாலுமியின் ஆலோசனையுடன் அரேபியப்பெருங்கடலில் பருவநிலை மாற்றங்களை உணர்ந்து 23 நாட்கள் கவனமாக கப்பல்களை செலுத்தி இந்தியாவின் தெற்கு கரையோரமுள்ள கேரளப்பகுதியின் கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வந்து சேர்ந்தார் வாஸ்கோட காமா. அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 10498-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி.

கேரளாவின் கோழிக்கோடு துறைமுகம்தான் தென்னிந்தியாவின் மிகமுக்கியமான வர்த்தகமையமாக விளங்கியது. அப்போது கோழிக்கோட்டை ஆண்டு வந்த Samudiri (Zamorin) ராஜா வாஸ்கோட காமாவை வரவேற்று விருந்தளித்தார். ஆனால் வாஸ்கோட காமா தனக்கு உகந்த பொருட்களை பரிசாக தராததால் அவர் கோபமடைந்தார் மேலும் உள்ளூர் வர்த்தகர்களோடு பகைத்துக்கொள்ள விரும்பாத அவர் போர்ச்சுக்கீசியர்களோடு வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள மறுத்து விட்டார். இருப்பினும் நிறைய இந்திய நறுமணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் லிஸ்பன் நோக்கி பயணமானார் வாஸ்கோட காமா. இந்தப்பயணம் மிக கடுமையானதாக அமைந்தது வழியில் அவருடைய வீரர்கள் பலர் scurvy எனும் நோய்க்கு பலியாயினர். கிட்டதட்ட ஓராண்டு பயணத்திற்கு பிறகு சென்ற நான்கு கப்பல்களில் இரண்டு மட்டும் பத்திரமாக போர்ச்சுக்கல் வந்தடைந்தன. கப்பலில் சென்ற 170 பேரில் 55 பேர் மட்டுமே நாடு திரும்பினர்.

கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய வாஸ்கோட காமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னர் அவருக்கு பெரும் பொருளை பரிசாக தந்தார். அதோடு இந்தியப்பெருங்கடலின் தளபதி என்ற பட்டத்தைத்தையும் தந்து கெளரவித்தார். 80 ஆண்டுகளாக காணப்பட்ட கனவு நனவாகிவிட்டதாக மகிழ்ந்தார் மன்னர். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா நோக்கி பயணமானார் வாஸ்கோட காமா. இம்முறை தன்னை எதிர்த்த முஸ்லீம் வர்த்தகர்களை எதிர்த்து சமாளிக்கும் திட்டத்தோடு இருபது கப்பல்கள் புடைசூழ பயணமானார். அந்தப் பயணத்தில் சில கொடூரமான காரியங்களில் அவர் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது. போர்ச்சுக்கீசியரோடு வர்த்தகம் புரிய மறுத்த பல இந்தியர்களை கொன்றார். ஒரு சம்பவத்தில் ஒரு கப்பலை வழிமறித்து பொருட்களையெல்லாம் அபகரித்துக்கொண்டு கப்பலில் இருந்த 380 பேரை அங்கயே வைத்து பூட்டி கப்பலை தீயிட்டு கொளுத்தினார் கப்பலிலிருந்த அத்தனை பேரும் பரிதாபமாக மடிந்தனர்.

இரண்டாவது முறை வாஸ்கோட காமா கோழிக்கோட்டிற்கு வந்த போது முஸ்லீம்களை அங்கிருந்து அகற்றுமாறு Samudiri மன்னரை கேட்டுக்கொண்டார். மன்னர் தயங்கவே வாஸ்கோட காமா ஈவு இரக்கமின்றி 38 பேரை கொன்று உடல்களை கடலில் மிதக்க விட்டார் அதோடு கோழிக்கோடு துறைமுகத்தையும் குண்டுகள் வீசி தாக்கினார். வேறு வழியின்றி அவரோடு வர்த்தக உடன்படிக்கை செய்து கொண்டார் Samudiri ராஜா. அந்த உடன்படிக்கையோடு போர்ச்சுக்கல் திரும்பும் வழியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பல போர்ச்சுக்கீசிய காலனிகளை உருவாக்கினார் வாஸ்கோட காமா.

மூன்றாவது முறையாக இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோட காமா. ஆனால் வந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி அவர் கோழிக்கோட்டிலேயே காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தேவலாயத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டு பின்னர் 1539-ஆம் ஆண்டு அதன் மிச்சங்கள் போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டன. கடைசிப்பயணங்களில் அவர் புரிந்த கொடுமைகளையும், வன்முறைகளையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் வாஸ்கோட காமாவின் கண்டுபிடிப்பு வரலாற்று சாதனைகளில் முக்கியமான இடத்தைப் பெற வேண்டிய ஒன்று. இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தை அவர் கண்டுபிடித்த பிறகு உலக நாடுகள் அதன் நேரடி வர்த்தகப் பலனை உணரத்தொடங்கின. இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் நேரடித் தொடர்புகள் ஏற்பட்டன.

பல நாடுகளில் போர்ச்சுக்கீசிய காலனிகள் உருவாவதற்கும் வாஸ்கோட காமாவின் முதல் பயணமே வழிவகுத்தது. அவரது பயண அனுபவங்கள் அடங்கிய ‘Lusiadas’ என்ற நூல் போர்ச்சுக்கலின் தேசிய காவியமாக போற்றப்படுகிறது. கண்டுபிடிக்கப்படாத அல்லது அறியப்படாத ஒன்றை நோக்கி மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நம்மில் எத்தனை பேர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம். ஆபத்துகளை கண்டு நாம் ஒதுங்கினால் சாதனைகளும் நம்மை விட்டு ஒதுங்கும் எல்லா வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையும் நமக்கு சொல்லும் உண்மை அது.

error: Content is protected !!