ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல! –

ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல! –

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல. எனவே, எங்களுக்கு உலக அளவில் நாடாளுமன்றத்தினரின் ஆதரவு தேவை என  தொல். திருமாவளவன், அமெரிக்காவின் சர்வதேச மாநாட்டில் கேட்டுக் கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், அமெரிக்காவில் நியூஜெர்சியில் நடைபெற்ற ICDWD சர்வதேச மாநாட்டில் ‘சாதிய ஒடுக்கு முறை கள் மற்றும் அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள்’ என்னும் சர்வதேச மாநாட்டில் நேற்று பங்கேற்றார். இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் திருமாவளவன் பேசிய போது, ”இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்கள் இருக்கின்றன. தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் சாதியின் பெயரால் பல்வேறு வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சாதி என்னும் அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இந்தியாவில் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. வன்கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். தலித்துகளை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று மற்ற சமூகத்தினர் கருதுகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல. எனவே, எங்களுக்கு உலக அளவில் நாடாளுமன்றத்தினரின் ஆதரவு தேவை. முதலில் நாம் இந்தப் பிரச்னையை ஐநா சபையில் கொண்டுவர வேண்டும்.

ஐநா சபை இனவாத ஒழிப்பை அங்கீகரித்தது மற்றும் இனவெறியால் நடைபெற்ற வன்கொடுமை களை அகற்றுவதற்கான தீர்வைக் கண்டறிந்தது. ஆனால், ஐநா சபையில் சாதி ஒழிப்புக்கான திட்டங்கள் ஏதும் இதுவரையில் இல்லை.

எனவே, ‘சாதியவாதம்’ என்பது ஒரு ‘வன்கொடுமை’ என உலக அளவில் அங்கீகரிக்க, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்னையை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். 20 கோடிக்கும் அதிகமான மக்கள் சாதியால் பாதிக்கப் பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டைவிட 2016 ஆம் ஆண்டில் 5.5 சதவீத சாதிக் கொடுமைகள் அதிகரித்துள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட்டதாகக் குறிப்பிடும் இந்திய அரசு இதை ஒரு உலகளாவிய பிரச்னையாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.எனவே, சாதியவாதப் பிரச்னையை அரசுகளின் மூலமாக ஐ.நா சபையில் எழுப்ப வேண்டுமென அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இனவாதத்தைப் போல் சாதியவாதமும் ஒரு வன்கொடுமை என அங்கீகரித்து ஐநா சபை ஏற்றுக்கொள்ள வேண்டும்,”என்று திருமாவளவன் பேசினார்.

error: Content is protected !!