பல்லைப் பார்த்து ஹெல்த் கண்டீசனை தெரிஞ்சிக்கலாம்! அது பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!

பல்லைப் பார்த்து ஹெல்த் கண்டீசனை தெரிஞ்சிக்கலாம்!  அது பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதவை. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழை வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.மருத்துவ உலகில் “Mouth is the Mirror of our Body” என்னும் வாசகம் மிகவும் பிரபலமானது. பல் போனால் சொல் போச்சு என்னும் தமிழ் பழமொழியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

dental jan 27

எனவே குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறாக இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்குசேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு
ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். முன்னரே சொன்னது மாதிரி பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.”குழந்தைகள் பல் மருத்துவம் ஆங்கிலத்தில் Paedodontics என்று அழைக்கப் டுகிறது.

பல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையையும் நாம் சிறு வயதிலேயே அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சை செய்தால் அதைப் பெரியதொரு பிரச்சனையாக ஆகவிடாமல் அப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.இளம் குழந்தைகளின் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பல் மருத்துவரை அவ்வப்போது அணுகுவது நல்ல பயனைக் கொடுக்கும்.

உதாரணமாக….

*பல்லை காரணியாகக் காட்டி நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முடியும்.

* உணவு, சாக்லேட், ஜஸ்கிரீம், கேக் போன்றவற்றை சாப்பிட்ட பின்பு பற்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற முடியும்.

* பற்களை காலையில் மட்டும் அல்லாமல் இரவில் உறங்குவதற்கு முன்னும் பல்·· துலக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூற முடியும்.

* சிறு வயது குழந்தைகளுக்கு உரிய பழக்க வழக்கங்களான விரல் சூப்புதல் (Thumb Sucking), பென்சில் சுவைத்தல், (PencilBiding ) மற்றும் Tongue thrusting· போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

* குழந்தைகளின் பால் பற்கள் (milk teeth) சரியான முறையில் இருக்கிறதா என்பதைக் கவனிக்க முடியும்.

* 12 வயது சிறியவர்களின் நிரந்தர பற்கள்·(Permanent teeth)· சரியான வயதில் சரியான இடத்தில் சரியான முறையில் வளருகிறதா என்பதைக் கவனித்து அதற்கு ஏற்றாற் போல் ஆரம்பத்திலேயே சிகிசசை செய்ய முடியும்.

* குழந்தைகளின் தாடை சரியான முறையில் வளருகிறதா···· என்பதையும் கவனிக்க முடியும்.

Dental-Health2

மேலும் சிறியோர், பெரியோர் ஆண்/பெண் என்று சகலருக்கும் வரும் ஈறு நோய்கள்

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும்.இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியா வால் வெளிவரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது.

அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம் தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.

பொதுவாக பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண் படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக் கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி
காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை

வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன், பற்காறைகளை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ulara Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

பல் சொத்தை

பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழிவகுத்து பல் அத்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை

சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.

பற்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள்

1) பல் சொத்தையும், சிகிச்சை முறையும்:

பற்களில் சொத்தை ஏற்பட்டவுடன் அதை கவனித்து பற்களை அடைத்துக் கொள்ள வேண்டும். பற்களை அடைப்பதற்கு சிமெண்ட, வெள்ளி, தங்கம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகளும், காம்போசிட் ரெசின் என்னும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பொருட்களும் இருக்கின்றன. பல்லின் தன்மைக்கேற்ப தகுந்த பொருளைக் கொண்டு பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

2) உடைந்த பற்களும், பற்கூழ் சிகிச்சை முறையும்:

பற்கள் உடைந்தாலோ, பற்களின் மீது அடிப்பட்டாலோ, சில சமயங்களில் அப்பற்கள் நிறம் மாறிக் கொண்டே வரும். பார்ப்பதற்கு விகாரமாகவும், பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதனால் உடலின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.

2.அ )பற்கூழ சிகிச்சை (ROOT CANAL TREATMENT)

இதற்கு பற்களின் உட்பக்கமாக வெளியே தெரியாமல் ஒரு துவாரம் போட்டு பழுதுபட்ட பற்கூழை (Pulp) எடுத்துவிட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுவோம். அதன் பின் பற்களின் மேல் பரப்பில் உள்ள எனாமல் பகுதியை தேய்த்து எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான மற்றும் பிளாஸ்டிக்கினால் ஒரு உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.

.ஆ ) பற்கள் சிறிதளவே உடைந்திருந்தால் அதில் காம்போசிட் என்ற பொருளை வைத்து நீலநிற ஒளியைப் (Ultra Violet) பாய்ச்சி முழு பல்லாக கொண்டு வரமுடியும். இந்த நவீன சிகிச்சைக்கு Light Cure Treatment என்று பெயர்.

.இ ) பற்கள் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினால் ஆன ஒரு அங்குல (1 or 11/2 inch) நீளமுள்ள ஸ்க்ரூவைப் பொருத்தி விடுவார்கள். பின்னர் அதன் மேல் பீங்கானில் பல்லைப் போல ஒரு உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant பற்கள் (Teeth) என்று பெயர்.

3) பல் ஈறு நோய் மற்றும் சிகிச்சை முறை:

பற்களுக்கு இடையில் படியும் காரைகளினால் பற்களின் ஈறுகள் கெட்டு இரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரைகளும் ஒரு காரணம். மேலும், வெற்றிலை பாக்கு போடுவதாலும், புகை பிடிப்பதாலும் பொடி போடுவதாலும், பற்களில் கறை படியும். இதற்கு பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காரை மற்றும் கறைகளை நீக்கிவிடலாம்.

4) தாடை எலும்பு முறிவும், சிகிச்சையும்:

வாகனங்கள் மூலமாக விபத்து ஏற்படும் போது தாடை எலும்புகள் உடைந்து விடுவதும் உண்டு. உடைந்த தாடை எலும்பில் பற்கள் இருக்கும் போது மேல் பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி உடைந்த எலும்புகளை சரியான நிலையில் பொருத்திவிடலாம்.இப்போதுள்ள நவீன சிகிச்சை முறையில் உடைந்த தாடை எலும்புகளில் எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி அவைகளை நிரந்தரமாக வைத்து விடுவார்கள். இந்த நவீன சிகிச்சை செய்வதால் உடனேயே வாயை திறந்து பேசவும், சாப்பிடவும் வசதியாக இருக்கும்.

5) வாய் புற்று நோய் மற்றும் சிகிச்சை முறை

வாய் புற்று நோய்க்கு 3 காரணங்கள் உள்ளன. அவையாவன.

SharpTeeth (கூர்மையான பற்கள்),

Sepsis (வாயில் சீழ் வடிதல்),

Spiced Food (கார வகை உணவுகள்),

Syphilis (பல்வினை நோய்),

Smoking (புகை பிடித்தல்)

மேற்கூறிய காரணங்களால் வாய்புற்றுநோய் வருவதால் ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வெற்றிலை பாக்கு, புகையிலை தவிர்த்து, துலக்குவதற்கு மிருதுவான பொருட்களை உபயோகிப்பதாலும், அதிக காரவகை உணவுகளை தவிர்ப்பதாலும் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

ஏதாவது ஒரு காரணத்தால் வாயில் புண் ஏற்பட்டால் அந்தப் புண் பத்து நாட்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி அது புற்று நோயின் அறிகுறியா? என்று சோதித்து தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கதிர்வீச்சு மூலமாகவோ, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமாகவோ ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம்.

6) ஒழுங்கற்ற பற்களும், பல்சீரமைப்பு சிகிச்சையும்:

குழந்தைப் பருவத்தில் கை சூப்பும் பழக்கத்தினாலும், நாக்கைத் துருத்திக் கொள்வதாலும், கீழுதட்டைக் கடிப்பதாலும், உறங்கும் போது வாயினால் மூச்சுவிடுவதாலும், பற்கள் தூக்கலாகவும், ஏறுமாறாகவும் அமைந்து விடுகின்றன.பற்களின் அமைப்பு ஒழுங்காக, வரிசையாக இல்லாமல் சீர்கெட்டு இருந்தால் முகத்தின் வசீகரம் குறையும்.இதற்கு ஆர்த்தோடான்டிக் அப்ளையன்ஸ் எனப்படும் கிளிப் போட்டு சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் நிறைய வகைகள் உண்டு.

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும். பற்களையும், ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதய குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல்கலை கழகம் நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள்: மனிதனின் வாய் பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிருகளும் இருக்கின்றன. இவற்றில் தீமை தரும் நுண்ணுயிர்கள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் என்ற
நுண்ணுயிரி ஆகும்.

பற்கள் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

* பற்களுக்கிடையில் அழுக்கு, காறை சேராமலிருக்க தினமும் பற்களுக்கிடையில் நூலை நுழைத்து முன்னும் பின்னும் இழுத்து இழுத்து கிளீன் பண்ணவேண்டும்.

* ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் நிறைய தண்ணீர் கொண்டு வாயை நன்றாக பலமுறை கொப்பளியுங்கள்.

* சாப்பிட்ட பின் வாயை வெளியே மட்டும் தண்ணீரால் துடைத்துவிட்டு வந்துவிடாதீர்கள். பலபேர் இதைத்தான் செய்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. கேட்டால் வாய் கழுவும் தண்ணீர் உப்பாக இருக்கிறது என்பார்கள். அல்லது சாப்பிட்ட டேஸ்ட் போய்விடுமாம். இந்த இரண்டு பதிலுமே தவறானது.

* நான்கு அல்லது ஐந்து மாதத்துக்கொரு முறை பிரஷ்ஷை மாற்றிவிடுங்கள்.

ஒவ்வொரு பல்லுக்கும் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் ரத்தக்குழாயும், நரம்பும் இருக்கின்றன. ரத்தக்குழாயும், நரம்பும் கடுமையாக பாதிக்கப்பட்டால் தாங்க முடியாத பல்வலி, வீக்கம், பல் கூச்சம், ரத்தம் மற்றும் சீழ் வடிதல் முதலிய நிறைய பிரச்சினைகள் இந்த பாதிக்கப்பட்ட பல்லுக்கு ஏற்படும்.

முன்பெல்லாம் தாங்க முடியாத வலியுடன் மிகமிக கெட்டுப்போன ஒரு பல்லுடன் ஒருவர் டாக்டரிடம் வந்தால் அந்தப் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ரூட் கெனால் தெரப்பி என்று சொல்லக்கூடிய சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட அந்தப் பல்லை பிடுங்காமல் சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்.

விபத்தினால் பல் பாதிக்கப்பட்டாலோ, பல் உடைந்து போனாலோ பல்லில் ஓட்டை விழுந்திருந்தாலோ பல்லின் அடிப்பாகத்தில் சீழ் கட்டியிருந்தாலோ மேற்சொன்ன சிகிச்சை கைகொடுக்கும்.இந்த சிகிச்சை முறையில் பல்லுக்கு அடியிலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பையோ, சீழையோ பல்லுக்கு நடுவில் மெல்லிய ஊசியை நுழைத்து உள்ளே போய் சுத்தம் செய்து எடுத்துவிட்டு பல்லுக்குள் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து விடுவார்கள். ஆனால் இது ஒரே ஒரு தடவையில் முடிகிற காரியமல்ல. சுமார் மூன்று அல்லது நான்கு முறை பல் டாக்டரிடம் சென்றுதான் ஆக வேண்டும்.

இது வரை குறிப்பிட்டுள்ளவை சில நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகளாகும். நமது பற்களைப் பாதுகாத்துக் கொள்வதும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது முக்கியக் கடமையாகும். வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்யம் கெடலாம். ஆதலால் ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.

தகவலில் உதவி::டாக்டர் செந்தில். வசந்த்

error: Content is protected !!