மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

விரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் வசம் போக ஆணை பிறப்பித்து விட்டது. இந்தப் பதவிகளுக்கு 1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், மறைமுக தேர்தல் முறையும் நடைமுறையில் இருந்தது. பின்னர் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெருக்கடியாலும், நீதி மன்ற உத்தரவாலும் உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு நடத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் முக்கியமான பகுதிகளில் மேயர் பதவிகளைக் கேட்டு வருகின்றன. இது, திமுக மற்றும் அதிமுக தலைமையிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மேயர் பதவிக்கு மட்டும் மறைமுக தேர்தல் நடத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உயா்கல்வி, தொழில், உள்ளாட்சி ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தோதல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக சட்ட மசோதா கொண்டு வருவது எனவும், அதற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த தகவல் வெளியான நிலையிலேயே பல தரப்பிலும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது

ஆனால் அதை எல்லாம் சட்டை செய்யாமல் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தில் மேயர் பதவி மட்டுமின்றி நகராட்சித் தலைவர், மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!