தமிழ்நாட்டின் சுகாதாரம் இம்ப்ரூவ் ஆகி இருக்குது!- வைஸ் பிரசிடெண்ட் சர்டிபிகேட்!
இந்தியாவின் சுகாதார தரவரிசைக்கான பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது. அதில் முதல் இடத்தில கேரளாவும் கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசமும் இடம் பிடித்துள்ளதாகவும், சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளதாகவும் செய்தி வெளியான சுவடு இன்னும் மறையவில்லை. ஆனால் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் சுகாதார சதவிகிதம் அதிகமாக உள்ளது என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக மக்களின் நிலமும், மனமும் செழிப்பாக உள்ளது; தமிழ்நாடு முன்னோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது என புகழ்ந்தார்.
இதை தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும், தமிழகம் சுகாதாரத்துறையிலும் முன்னேறி உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், மக்களின் தேவையறிந்து அரசு செயல்பட வேண்டும். கலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் வரலாறு என்று அனைத்திலும் தனிச்சிறப்பு கொண்டது தமிழ்நாடு. உலகம் முன்னேறிச்செல்லும் வேகத்திற்கு ஏற்ப நாமும் முன்னேறிச்செல்ல வேண்டும்.
எம்ஜிஆர் முதல் ரஜினி வரை, ஜெயலலிதா முதல் கருணாநிதி என விவசாயம், சினிமா, அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ளளார்.