இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக DAS உரிமம் வாங்கியது தமிழக அரசு கேபிள் டிவி!

இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக DAS உரிமம் வாங்கியது தமிழக அரசு கேபிள் டிவி!

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஜெயலலிதாவின் விடாமுயற்சிகளின் காரணமாகவும், தமிழக அரசு எடுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆணையினை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

arasu apr 18

அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று தொடங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். இதற்கென, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களினால் இந்நிறுவனம் செயலிழந்த நிலையில் இருந்தது.

ஜெயலலிதா மே 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, புத்துயிரூட்டி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என்று பெயர்மாற்றம் செய்தார். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 2.9.2011 அன்றும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை 20.10.2012 அன்றும் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் 90-100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவை, கேபிள் ஆபரேட்டர்களிடமும் பொதுமக்களிடமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2.9.2011 அன்று 4.94 லட்சங்கள் என இருந்த இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜெயலலிதா அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 70.52 லட்சமாக உயர்ந்துள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சென்னை மாநகரப் பகுதிகளுக்கு மட்டும் CAS முறையிலான பன்முக கேபிள் ஆபரேட்டர் உரிமத்தினை வழங்கியது. கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட இந்தியாவிலுள்ள நான்கு பெருநகரங்களை 31.10.2012-க்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும், நாடு முழுவதும் 31.12.2016-க்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான, சென்னை பகுதிகளுக்கான DAS உரிமம் வழங்கக் கோரி 5.7.2012 அன்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு DAS உரிமம் வழங்கக் கோரி 23.11.2012 அன்றும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை குறித்து முடிவெடுப்பதற்காக, அமைச்சகங்களின் கூட்டுக்குழுவினை 3.1.2013 அன்று மத்திய அரசு அமைத்தது.

ஜெயலலிதா 16.12.2012 அன்று அப்போதைய பாரதப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு DAS பகுதிகளுக்கான DAS உரிமம் வழங்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கோரியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா 3.6.2014 அன்று பிரதமரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்குமாறு வலியுறுத்தினார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு) ஜெயலலிதாவுக்கு இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான கடிதத்தினை அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 5.7.2014 அன்றும் DAS உரிமம் தொடர்பாக ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் செயலாளர் மற்றும் இந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரை 8.12.2014 அன்று புதுடெல்லியில் நேரில் சந்தித்து DAS உரிமம் வழங்குவதை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினர்.

7.8.2015 அன்று ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்குவது குறித்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சென்னை DAS பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் எம்.எஸ்.ஒ உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் நிலுவையில் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தற்காலிக உரிமம் உடனடியாக வழங்குமாறு 29.10.2015 அன்று விண்ணப்பிக்கப்பட்டது.

ஜெயலலிதா 14.6.2016 அன்று பிரதமரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு DAS பகுதிகளுக்கான எம்.எஸ்.ஒ உரிமம் வழங்குவது குறித்து மீண்டும் வலியுறுத்தியிருந்தார். மேலும், தமிழக முதல்வர் 27.2.2017 அன்று பிரதமரையும், 28.2.2017 அன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவையும் நேரில் சந்தித்து DAS உரிமம் வழங்குவது குறித்து வலியுறுத்தினார். ஜெயலலிதாவின் இடைவிடாத தொடர் முயற்சிகளின் காரணமாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்கி ஆணையிட்டுள்ளது.

இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். வெகு விரைவில் தமிழக மக்கள் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை இதன்மூலம் பெறுவார்கள். மறைந்தும் மறையாமல் தமிழ்நாட்டு மக்கள் மனதில் வாழும் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமருக்கும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்கும் தமிழக அரசு சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!