சபாநாயகர் 3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை! – சுப்ரீம் கோர்ட்

சபாநாயகர் 3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை! – சுப்ரீம் கோர்ட்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட். மேலும் சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் விளக்கம் கேட்டு தங்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் தொடர்பாக மேல்நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏக்களான ஏ.ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தது.

அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார். சில புகைப்பட ஆதாரங்களுடன் அந்த மூன்று பேர் மீது மீண்டும் கடந்த மாதம் 26-ஆம் தேதி புகார் மனு அளித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால் மூன்று எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.30) நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் அவர்களது வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக் கிழமை ரிட் மனுக்கள் தாக்கல் செய்தார். அந்த மனுக்களில், பேரவைத் தலைவருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேரவைச் செயலரிடம் ஏப்ரல் 30-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரபட்சமாக நடந்து வருகிறார். குறிப்பாக, 22 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கை பாரபட்சமாக இருப்பதை காட்டுகிறது.
பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே, எங்களுக்கு எதிராகத் தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.எனவே, தகுதிநீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக பேரவைத் தலைவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த ரிட் மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், இது தொடர்புடைய ரிட் மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.

இதை அடுத்து சுமார் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விசாரணையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் அனுப்பியது குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு உத்தரவிட்டது.

error: Content is protected !!