ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் ‘தோல் வங்கி’
நம் உடம்பின் மேல் முழு வளர்ச்சியடைந்த சராசரி அளவுள்ள மனிதரின் தோல் பரப்பளவு – 21 சதுர அடிகள். மொத்தத் தோலின் எடை – ஏறத்தாழ 4.08 கிலோகிராம். தோலில் படர்ந்துள்ள இரத்தக் குழாய்களின் நீளம் – 17.7 கிலோ மீட்டர்கள்.குழந்தைப் பருவத்தில் 1 மி.மீ. தடினமனாக உள்ள தோல், முழுவளர்ச்சி அடைந்த உடலில் 2 மி.மீ. தடிமனாக மாறுகிறது. வயது கூடக் கூட, தோலின் தடிமன் மீண்டும் குறைகிறது.
சூரிய ஒளியின் உதவியால், நமது உடலில் வைட்டமின் D உருவாக உதவும் உறுப்பு நமது தோல்.நமது கைவிரல் ரேகை ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் தனித்துவம் உள்ளது என்றாலும், உயிரணுவில், Naegeli Syndrome என்ற குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கு விரல்களில் ரேகை வடிவங்கள் உருவாவதில்லை.
பார்வைத் திறன் இழந்தவர்களின் தொடுதல் உணர்வு பல மடங்கு கூர்மை பெறுவதால், அவர்களால் தொடுதல் மூலம் ‘பார்க்க’ முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நமது தோலில் ஒவ்வொரு நிமிடமும் 50,000 உயிரணுக்கள் இறந்து, அவை நமது மேல் தோலிலிருந்து சிறு துகள்களாய் வீழ்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள தூசிகளில் பெருமளவு, உதிர்ந்த நமது தோல் துகள்களே!
இதனிடையே இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஆம்.. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடந்த வாரம் தொடங்கப் பட்ட தோல் வங்கிக்கு 2 பேர் தோல் தானம் செய்துள்ளனர்.
ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் ‘தோல் வங்கி’ கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந் தவர்களிடம் இருந்து முதுகு, பின்னங்கால் மற்றும் பின்னந் தொடையில் இருந்து தோல் பெறப்பட்டு உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்படுகிறது. தீ, அமிலம், மின்சாரம், மருந்து மற்றும் ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த வங்கியிலிருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இது தொடர்பாக மருத்துவ மனை டீன் (பொறுப்பு) டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் , “நாட்டிலேயே முதல்முறையாக இங்கு தோல் வங்கி தொடங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (41) என் பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவருடைய தோலும் தானமாக பெறப்பட்டு தோல் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இயற்கையாக மரணம் அடைந்த மற்றொருவரிடம் இருந்தும் தோல் தானம் பெறப்பட்டுள்ளது. தோல் வங்கி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய்துள்ளனர். தற்போது மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந்தவர்களிடம் இருந்து மட்டும் தோல் தானம் பெறப்படுகிறது. வரும் காலத்தில் உயிருடன் இருப்பவர்களிடமிருந்தும் தோல் தானம் பெறப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
70 லட்சம் பேர் தீக்காயம்
தோல் வங்கி பற்றி அழகியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக் டர் ஜி.ஆர்.ரத்னவேல் கூறியதாவது:
தானமாக பெறப்படும் தோல் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சுத்திகரித்து பதப்படுத்தப்படும். 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை யில் 5 ஆண்டுகள் வரை தோல் பராமரிக்கப்படும். தீ போன்ற விபத்து களால் தோல் பாதிக்கப்பட்டவர் களுக்குத் தானமாக பெறப்பட்ட தோல் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 15 நாட்களில் புதிய தோல் வளர்ந்த பிறகு, மேலே பொருத்தப்பட்ட இந்த தோல் தானாகவே உதிர்ந்துவிடும். நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் பேர் தீக்காயம் அடைகின்றனர். இவர்களின் தோல் செயலிழந்த நிலையில், உடலின் நீர்ச்சத்து இழப்பு மற்றும் தொற்று நோய்கள் அதிகரிப்பு போன்ற வற்றால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தானமாக பெறப் பட்ட தோல் தற்காலிக போர்வை யாக பயன்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வாழ்க்கைக்கு விரைவில் திரும்பவும், மருத்துவச் செலவு களைக் குறைக்கவும் தோல் வங்கி வழிவகுக்கிறது. பதிவு செய்யப்பட்ட வரிசை முறையில் தேவையான நோயாளிகளுக்குத் தோல் பொருத்தப்படும்.
தோல் தானம் தகுதி
இயற்கை மரணம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக் கப்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம். எச்ஐவி, ஹெபடை டிஸ் பி, பால்வினை மற்றும் தோல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் தோலைத் தானமாக பெற இயலாது. தோல் தானம் செய்ய அழகியல் துறை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல் லூரி மருத்துவமனை, சென்னை – 600001 என்ற முகவரியை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.