உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: அரசாணை வெளியீடு!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கான பணிகள் தற்போது நிசமாகவே தொடங்கி யுள்ளது.

இது தொடர்பான தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்டவாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்தும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு அதில் விடுப்பட்ட அனைவரையும் சேர்த்து திருத்தம் மேற்கொள்ளவும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2016-ல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், வார்டு இடஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக அப்போது தேர்தல் நடத்த இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2017 நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் திமுக சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் இறுதி செய்வதற்கு 3 மாதம் கால அவகாசம் வேண்டுமென்றும், தற்போதைய சூழலில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 5 முறை நீட்டிக்கப் பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமானது குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் அதிமுகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், மாவட்டம், ஊராட்சி மற்றும் ஒன்றியங்கள் வாரியாக வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, தனியாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!