சபரிமலை- பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 7 பேர் அமர்வு விசாரிக்க முடிவு!

சபரிமலை-  பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 7 பேர் அமர்வு விசாரிக்க முடிவு!

மலை ஐயப்பன் கோயிலுக்கள் செல்ல அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்குகள், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று இன்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் காலத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் விவரங்களையும் ஆன்லைனில் பதவிவேற்றம் செய்துள்ளனர். இதனை கேரள போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், வழிபாடு நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி செல்ல அனுமதிக்கப்படவேண்டும் என்று, கடந்த 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. உடல் ரீதியான வித்தியாசங்களின் அடிப்படையில் பெண்கள் மீது விதிக்கப்படும் தடை, அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த தடை அரசியல் சட்டத்தில், அனைவருக்கும் சம உரிமைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 14 மற்றும் மத உரிமையை அளிக்கும் சட்டப்பிரிவு 25 ஆகியவற்றிற்கு முரண்பாடானது என்று கருத்து தெரிவித்தது.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் அந்த தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் விளைவாக, போராட்டங்கள் வெடித்தன. பெண் செயல்பாட்டாளர்கள் பலர், சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. 3:2 என்ற பெரும்பான்மையில் இந்த தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அதில், ”பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது.

மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடுகூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

எனினும், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதி மன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்ர நிலையில்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் காலத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் விவரங்களையும் ஆன்லைனில் பதவிவேற்றம் செய்துள்ளனர். இதனை கேரள போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், வழிபாடு நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!