ராணுவத்தில் ஆணென்ன..? பெண்ணென்ன? எல்லாம் ஓரினம்தான்- சுப்ரீம் கோர்ட் சுளீர் தீர்ப்பு!

ராணுவத்தில் ஆணென்ன..? பெண்ணென்ன? எல்லாம் ஓரினம்தான்- சுப்ரீம் கோர்ட் சுளீர் தீர்ப்பு!

பெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள், காரணிகள் எல்லாம் அவர்கள் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. ராணுவத்தில் சமத்துவத்துடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அரசின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். ராணுவத்தில் பெண்களுக்கும் உயர்ந்த அதிகாரிகள் அந்தஸ்து பதவிகள் வழங்க வேண்டும். பல்வேறு பெண் அதிகாரிகள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்கள். சேனா விருதுகளைப் பெற்றுள்ளார்கள். ஐ.நா. அமைதிப் படையில் பணிபுரிந்துள்ளார்கள். ஆதலால், பெண்களின் உளவியல் காரணிகளைக் காரணமாக்கி பதவி மறுக்க முடியாது. கடந்த காலத்தில் ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்கள். பெண்களை நடத்தும் பாங்கில் அரசின் மனநிலையில் மாற்றம் தேவை. ராணுவத்தில் ஆண்களும், பெண்களும் சமமாகப் பணியாற்றும்போது அவர்களுக்குள் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று முன்னரே சொல்லி இருந்தாலும் இந்திய கடற்படையில் பெண் அதிகாரிகளும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்க நிரந்தர கமிஷன் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்கள் குறுகிய காலம் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி  ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கடந்த 2010-ம் ஆண்டு விசாரித்த ஐகோர்ட் கடற் படையில் பெண்களை முழுமையான சேவையில் பணியமர்த்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது, ராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவியிடங்களுக்கு பெண்களை ஏன் தேர்வு செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அளித்த அறிக்கையில், “ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு. அதேபோல், மகப்பேறு காலங்களில் அவர்கள் நீண்ட விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பராமரிப்பது, கணவர்களின் தேவைகளைக் கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன. இதனால், ராணுவத்தில் கமாண்டர்களாகப் பணிபுரிவது பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, ராணுவத்தில் பணிபுரியும் ஆண்கள், உடல் வலிமையில் குன்றிய பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்று நடப்பதும் கேள்விக்குறிதான். எனவே, இது போன்ற காரணங்களால் ராணுவக் கமாண்டர்களாக பெண்களை பணியமர்த்துவது அரசுக்குச் சவாலான விஷயம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது ராணுவ படைப்பிரிவுகளில் பாலின வேறுபாடு பார்க்க யாரும் 101 காரணங்கள் கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். நாட்டுக்காக சேவையாற்றிய பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க மறுப்பது அநீதியாகும். ரஷ்ய போர் கப்பல் களில் பெண்களுக்கான கழிவறைகள் இல்லை என்ற காரணத்தை காட்டி அவர்களை கடல் ரோந்து பணிகளில் நியமிக்க முடியாது என கூறுவதை ஏற்க முடியாது.

இது கடற்படையில் பெண் அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்க வகை செய்யும் 1991 மற்றும் 1998ம் ஆண்டுகளில் வகுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானது. மேலும் கடந்த 2008ம் ஆண்டுக்கு முன் கடற்படையில் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கப் படாது என்ற மத்திய அரசின் கொள்கை ரத்து செய்யப்படுகிறது. மேலும் பணி நிரந்தரமாகாமல் ஓய்வு பெற்ற பெண் கடற்படை அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடற்படையில் பெண்கள் பணியாற்ற இருந்த தடை நீக்கப்பட்ட பின் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இடையே வேறுபாடு பார்க்காமல் சம உரிமை வழங்கப்பட வேண்டும். பெண் அதிகாரிகளால் கடற்படைக்கு பல பாராட்டுகள் கிடைத்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைப்ப தற்கான நடைமுறைகள் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது.

error: Content is protected !!