ஏடிஎம்.மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம்: எஸ்பிஐ முடிவு
ஏடிஎம் சேவைக் கட்டணங்களை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் மாற்றியமைத்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 1 முதல் எஸ்பிஐ ஏடிஎம்.மில் ஒரு முறை பணம் எடுத்தால் அதற்கு சேவைக் கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும். ரூபே அட்டை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
4 முறைக்கு மேல்
ஒரே மாதத்தில் 4 முறைக்கு மேல் ஏடிஎம்.மில் பணம் எடுத்தால் அதற்கும் ரகவாரியாக கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது வாடிக்கையாளர் தனது வங்கிக் கிளையில் உள்ள ஏடிஎம் ஒவ்வொரு முறையும் ரூ.50 சேவைக் கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
வேறு ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்தால் ரூ.20 கட்டணமாகவும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும். கிளையில் உள்ள ஏடிஎம் அல்லாது வேறு ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் ரூ.10 சேவை கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெபாசிட்டுகளுக்கும் கெடுபிடி..
வங்கி முகவர்கள் மூலம் டெபாசிட் செய்யப்படும் ரூ..10,000 தொகைக்கு 0.25% கட்டணமும் குறைந்தது ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரை சேவைக் கட்டணமாகவும் வசூலிக்கப்படும். அதேபோல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். ரூ.2000 பணம் எடுத்தால் 2.50% சேவைக் கட்டணம் மற்றும் குறைந்தபட்சமாக ரூ.6 வரை சேவை வரியும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை. சாதாரண ஏடிஎம்களில் பணம் எடுப்பது குறித்து ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும். ‘இ வாலெட்‘ மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.‘இ வாலெட்‘ மூலம் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். வாலட் கணக்கில் வர்த்தக பிரதிநிதிகள் (வங்கி ஏஜெண்டு) மூலம் பணம் போடவும், எடுக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.1,000 வரை டெபாசிட் செய்தால் 0.25 சதவீதம் (குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.8 வரை) சேவை கட்டணமும், சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறைகள் அடுத்த மாதம் (ஜூன்) 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளது