சரவணபவன் அண்ணாச்சி கோர்ட்டில் சரண்டரான நிலையில் ஜெயிலில் அடைப்பு!
இன்னமும் கால அவகாசம் கேட்காமல் உடனடியாக சரணடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்ச ரில் வந்து சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சரவணபவன் ஓட்டல் ஊழியரின் மகளான ஜீவஜோதியை மறுமணம் புரிந்தால் வாழ்க்கையின் மிகப்பெரிய நிலைக்கு செல்லலாம் என்ற ஜோதிடத்தை நம்பி, ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடந்த 2001-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபாலும் அவரது ஊழியர்களும் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். அரசு சார்பில் தண்டனையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜகோபால் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் ம் ராஜகோபால் மீதான தண்டனையை உறுதி செய்து ஜூலை 7-ம் தேதி சரணடைய உத்தரவிட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்கள் சரணடைந்த நிலையில், ராஜகோபால் மட்டும் சரணடைய வில்லை. மாறாக, நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி ராஜகோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எழுந்து நடப்பதற்கே இரண்டுபேர் உதவி தேவைப்படுவதாகவும் ராஜகோபால் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையும் நிலையில், இறுதி நாளில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வதா என காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும், ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ராஜகோபால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்ட நீதிபதிகள், அவருக்கு வழங்கவேண்டிய மருத்துவ சலுகைகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.
இதையடுத்து ஸ்டெக்சரில் ராஜகோபால் கோர்ட்டுக்கு வந்து சரணடைந்தார். பின்னர் அவரை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ராஜகோபால் சக்கர நாற்காலியில் வந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் ஜனார்த்தனனும் சரணடைந்தார். அவரையும் புழல் சிறையில் அழைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் புழலுக்கு போகும் முன்னரே நெஞ்சு வலிப்பதாக கூறிய ராஜகோபாலை உடனடியாக ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் அழைத்து போய் பரிசோதனை செய்த நிலையில் அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாகக் கூறி அங்கேயே அட்மிட் செய்தனர்.
.