அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜெயிலுக்கு போன சாம்சங் துணைத்தலைவர் ரிலீஸ்!
தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவனத் துணை தலைவர் ஜே ஒய் லீ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சாம்சங் குழும தலைவர் ஜே வொய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்குகளில் கடந்த ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது சாம்சங் குழுமத் தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் வழக்குகள், தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குய்ன் ஹைக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததை யடுத்து பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தென் கொரிய நாட்டையே அரசியல் ரீதியாக உலுக்கிய வழக்காகும்.
இதில் லீ பிப்ரவரி 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இந்த வழக்கில் தென் கொரிய அதிபரும் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.உலக அளவில் மிகவும் பிரபலமாகத் திகழும் சாம்சங் குழும சொத்துக்கு வாரிசுகளில் ஒருவர் ஜே ஒய் லீ. சாம்சங் குழுமத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவராவார். தந்தை லீ குன் ஹீ-க்கு வயதானதைத் தொடர்ந்து குழும நிறுவனங்களுக்கு இவர் தலைமை ஏற்றார். கொரியாவின் மிகுந்த வசதி படைத்த குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்றாகும்.
சாம்சங் நிறுவனத்தில் தனது அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசியல் ஆதாயங்களை பெற அவர் முன்னாள் அதிபர் பார்க் குய்ன் ஹையின் தோழிக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் அதிபர் பதவியில் இருந்து பார்க் குய்ன் ஹை நீக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜே ஒய் லீ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்தார். அவரது தண்டனையை சியோல் உயர்நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகளாக குறைத்தது. இந்நிலையில் தனது தண்டனைகு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் ஜே ஒய் லீ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.