பொது இடங்களில் வை-பை உபயோகிக்கிறீர்களா? பீ கேர்ஃபுல்
இன்றைய சர்வேப்படி இணையப் பக்கங்களில் ஏற்படும் மொத்த சந்தடியில், 70 சதவீதம் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாகத்தான் ஏற்படுகின்றன. ஒரு நாளில், இந்தியர்கள் சராசரியாக, இணையத்துடன் 4 மணி 58 நிமிடங்கள் தொடர்பில் உள்ளனர். இந்தியாவில் மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 88.6 கோடி. பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிம் மட்டுமே பயன்படுத்துவோர் எண்ணிக்கை 35.9 கோடி.
இந்நிலையில் The ‘Digital Detox: Unplugging on Vacation’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பொது இடங்களில் உள்ள ‘ஃவை-பை’ இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது மொபைலில் இருந்து திருடப்படும் தகவல்கள் பற்றிய இந்த ஆய்வு இந்தியா உட்பட 14 நாடுகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது மக்கள் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்கள் அவற்றில் இருக்கும் ஆபத்துகளை உணராமல் இருப்பதாக இந்த ஆய்வு மேற்கோள் காட்டுகிறது.
இந்தியர்களில் 37 சதவீதம் பேருக்கு ஒரு நாள் கூட பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்கள் இல்லாமல் இருந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, சுற்றுலா பயணங்களின் போது இந்த தவிப்பு மிக அதிகம். வெளிநாட்டினரை பொறுத்தவரை சுற்றுலா செல்லும் போது செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிடுவர். ஆனால், இந்தியர்களி்ல் 54 சதவீதம் பேருக்கு வீட்டில் செல்போன்களை வைத்துவிட்டு செல்வது என்பதே முடியாத காரியமாகும்.
மொபைல் டேட்டா மூலம் இண்டர்நெட் கனெக்ட் செய்வது ஒருபுறமிருக்க இப்போது வெளிநாடுகளில் ஆங்காங்கே பரவலாக ‘வை-பை ஹாட்ஸ்பாட்’டுகள் உள்ளன. ஆனால், இவை பாதுகாப்பானதுதானா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற பொது வை-பை-யிலிருந்து லொகேஷன், செல்பி புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல. சைபர் கிரிமினல்கள் இந்த தகவல்களை திருடுவது எளிதான ஒன்றாகும். மேலும், இதுபோன்ற இண்டர்நெட்டில் இருந்து வங்கி பரிமாற்றங்கள், ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை செய்வதும் உகந்தது அல்ல.
இந்நிலையில், வெளிநாடுகளில் சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனக்குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 36 சதவீத இந்தியர்கள் பொது இடங்களில் உள்ள வை-பை இண்டர்நெட்டில் சொந்த ரகசிய தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால், இந்த தகவல்களை சைபர் கிரிமினல்கள் திருடும் ஆபத்து உள்ளது. எனவே பொது இடங்களில் உள்ள இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.