வாழைப்பழம் விற்பனையை பாதித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
சர்ச்சை புண்ணிய ஸ்தலமாகி விட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும்,என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு வாழைப்பழ விவசாயிகளையும் வியாபாரிகளையும் பாதித்திருக்கிறது.
சபரிமலைக்கு யாத்திரை போகும் வழியில் மற்ற கோவில்களுக்கும் சென்று வழிபடுவது வழக்கம்.அதில் முதலிடம் வகிப்பது பழநி முருகன் கோவில். அதே நேரத்தில் பொங்கல், பண்டிகை, தை பூசம் போன்ற விழாக்களும் வருவதால் வழக்கமாக டிசம்பர் ஜனவரி மாதங்களில் வாழைப்பழம் அமோகமாக விற்பனை ஆகும்.பழநி முருகனுக்கு படைக்கவும் பக்த்தர்களுக்கு விற்பனை செய்யவும் டன் கணக்கில் பஞ்சாமிர்தம் செய்யப்படும்.
ஐயப்ப பக்தர்களும் அரவன பாயசம், உன்னியப்பத்துடன் பஞ்சாமிர்தமும் வாங்கிச் செல்வர். சுப்ரீம் கோர்ட் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவிகள் கேரள மாநிலத்தை கலவர பூமி ஆக்கி விட்டனர்.
இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. சபரிமலை தேவஸ்தானத்துக்கு நஷ்ட ஈடு தருவதாக பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் பக்க விளைவாக பழனியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமாக இந்த சீசனில் பழனியில் நாளொன்றுக்கு 5 டன் பூவம்பழம் விற்பனை ஆகும்.ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய்க்கு குறைவாகக் கிடைக்காது.இப்போது ஒரு நாளைக்கு இரண்டு டன் பஞ்சாமிர்தம்கூட விற்பனையாவதில்லை.கஜா புயல் லட்சக்கணக்கான வாழை மரங்களை சாய்த்து விட்டதால்.இந்த ஆண்டு வாழைப்பழ விளைச்சலும் குறைவு.இருந்தும் இப்போது ஒரு பூவன் வாழைப்பழம் இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பஞ்சாமிர்தத்தின் ஹீரோவான வாழைப்பழமே விற்காததால் கற்கண்டு,வெல்லம்,ஏலக்காய் ஆகியவற்றின் விலையும் சரிந்து விட்டது!
சுப்ரீம் கோட்டை தீர்ப்பு இனிப்பானதுதான் என்றாலும் பாரம்பரிய இனிப்பான பஞ்சாமிர்த தயாரிப்பாளர்களையும்,வாழை சாகுபடியாளர்களையும் கசப்புக்குள்ளாக்கி விட்டது வருத்தமே!