ஆதாரில் தவறான தகவல் கொடுத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

ஆதாரில் தவறான தகவல் கொடுத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

இந்தியர்களில் முகவரியாகி விட்ட ஆதார் குறித்து அவ்வப்போது புதுப் புது அறிவிப்புகள் வருவது வாடிக்கை. அந்த வகையில் வங்கி உள்ளிட்டவைகளில் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தனையின்போது, தவறான ஆதார் எண்ணை அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், மத்திய அரசு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 4ஆம் தேதி மக்களவையிலும், கடந்த 8ஆம் தேதி மாநிலங்களவையிலும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் படி, பல்வேறு தரவுகளுக்கு ஆதார் எண்ணை பெறும் முன், அதன் உரிமையாளரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப்பட்டு, விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், ஆதார் எண்களை பயன்படுத்தி தனி நபர்களின் ரகசியகங்களை திருடுபவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்க வழிகாணும் வகையில், ஆதார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி பரிவர்த்தனையின்போது, தவறான ஆதார் எண்ணை பதிவு செய்தாலோ, அல்லது வழங்கினாலோ, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வழிவகை செய்யும், நடைமுறையை, வருகிற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல், மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5ஆம் தேதி, மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், வருமானவரித் தாக்கலின் போது, பான் கார்டு எண்ணுக்கு பதிலாக, ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு வருமான வரி தாக்கலின்போதும், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனை யின்போதும், பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த வகையில், நிதி உள்ளிட்ட பரிவர்த்தனைகளின்போதும், வருமான வரித் தாக்கலின்போதும், ஆதார் எண்ணை, தெரிந்தே, தவறாக பதிவு செய்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் எண்ணை தவறாக அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழிசெய்யும் நடைமுறையை, வருகிற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிட்டு அமல்படுத்த, மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது.

இதற்கிடையே, நாட்டில், 120 கோடி பேரிடம், ஆதார் எண் உள்ளது. பான்கார்டு எண் 41 கோடி பேரிடம் உள்ள நிலையில், 22 கோடி பேர் மட்டுமே, பான் எண்ணோடு, ஆதார் எண்ணை இணைத்திருக்கின் றனர். பான் எண்ணோடு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை, அண்மையில் மத்திய நீட்டித்தது.அன்றைய தினங்களுக்குள், பான் எண்ணோடு, ஆதாரை இணைக்காவிட்டால், பான்கார்டு காலாவதியாகிவிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!