மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துடுச்சு!

மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துடுச்சு!

அவர் ஆட்சி, இவர் ஆட்சி இல்லை எவர் ஆட்சியோ என்று மக்களை குழப்பிக் கொண்டிருந்த மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. மத்திய அரசு பரிந்துரையை ஏற்று ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 21ம் தேதி 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது. இந் நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜக.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜக அதற்கு மறுத்து விட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார்.

இதை அடுத்து சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் தெரிவித்தார். இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். *இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைந்துள்ளது.

இதனிடையே மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனாலும் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை விடுத்தார்.இறுதியாக மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு விட்டதால் தற்போது முதல் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து விட்டது.

error: Content is protected !!