பிரபுதேவா-வின் குலேபகாவலி படமும் ஒரு பயணக் கதைதான்! – இயக்குநர் பேட்டி!

பிரபுதேவா-வின் குலேபகாவலி படமும் ஒரு பயணக் கதைதான்! – இயக்குநர் பேட்டி!

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா, மதுசூதனன் ராவ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். `அறம்’ படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோ ஸின் அடுத்த படமாக இந்த படம் வெளியாகிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ல் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, “எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படம், ஒரு பயண கதைதான். அதேபோல் பிரபுதேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படமும் பயண கதைதான். அதனால்தான் எங்கள் படத்துக்கு ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். மற்றபடி, 2 படங்களுக்கும் தொடர்பு இல்லை. அதாவது பிரபுதேவா, ஹன்சிகா, முனீஸ்காந்த் ஆகிய மூவரும் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அதே புதையலை தேடி வில்லன்கள் ஆனந்தராஜ், மதுசூதனராவ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் அலைகிறார்கள். ரேவதி, ஒரு குழந்தையை தொலைத்து விட்டு தேடுகிறார். படத்தின் கலகலப்புக்கு யோகி பாபு இருக்கிறார். இதில் 15 வருடங்களுக்கு முன் பார்த்த பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம்.

கொஞ்சம் டீடெய்லா சொல்றதா இருந்தா இது பிளாக் காமெடி படம். தமிழ் சினிமால பிளாக் காமெடி ஜானர்ல படங்கள் ரொம்ப குறைவாத்தான் வருது. அந்த குறையை போக்குற விதமாக இந்த படம் இருக்கும். இந்த வகையறா படங்களுக்குன்னு இளம் ரசிகர்கள் நிறைய பெருகிட்டு வர்றாங்க. வெளிநாட்டுல வர்ற பிளாக் காமெடி படங்களை ரசிக்கிற நம் நாட்டு இளம் ரசிகர்களும் பெருகிட்டு வர்றாங்க. ஆனா நம் நாட்டுல அந்த அளவுக்கு இந்த வகை படங்களை எடுக்க மாட்டேங்கிறாங்க. அது ஏன்னு தெரியல. பாலிவுட்ல கூட இடையில சில படங்கள் பிளாக் காமெடி ஜானர்ல வந்துச்சு. ஆனா தொடர்ந்து அவங்களும் ஆக்‌ஷன், ரீமேக் படங்களுன்னு வேற மாதிரி பிசி ஆயிட்டாங்க. ஒரு மாதிரி த்ரில் மூடை கொடுத்துக்கிட்டே, சிரிக்கவும் வைக்கிற வித்தை இந்த ஜானருக்கு மட்டும்தான் இருக்கு. அதனாலதான் இதை கதைக் களமா எடுத்தேன்.

1947ல் நடக்கிற கதை, பிறகு 2017ல் இப்போ நடக்கிற கதைன்னு ரெண்டு காலகட்டத்தை சொல்ற படமா இது இருக்கும். 1947ன்னதும் சுதந்திர போராட்டமும் ஆகஸ்ட் 15ம்தான் நினைவுக்கு வரும். அதையொட்டிதான் அந்த பீரியட் காட்சிகள் வரும். அதுல ரசிகர்கள் பாக்கப்போற பிரபுதேவா வேற மாதிரியா இருப்பார். அந்த பீரியட்ல ஹன்சிகா இருக்க மாட்டார். அதுல பிரபுதேவாவுக்கு ஜோடி வேறொரு நடிகை. அது யாருங்கிறது சஸ்பென்ஸ். 2017ல் ஹைடெக் இளைஞனா வர்ற பிரபுதேவாவோடு ஹன்சிகாவை பார்க்கலாம். ரெண்டு காலகட்டத்துக்கும் முடிச்சி போடுற விதமா திரைக்கதை இருக்கும்.படத்தின் கதையை கேட்டதும், ஹன்சிகா நடிக்க சம்மதித்தார். படத்தில் அவர், ‘பப்’ டான்சராக வருகிறார்.’’என்றார்

error: Content is protected !!