புது தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

புது தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு புது தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். இதற்காக நாடு முழுவதிலும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, “இன்று தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி வரை, அதாவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் வரை அவருடைய கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நம்மை நாம் மறு அர்ப்பணிப்பு செய்து கொள்வோம். 4 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினோம். தற்போது இத்திட்டம் முக்கிய கட்டத்தை அடைந்து இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் மக்கள் நல்ல ஒத்துழைப்பை தந்து இருக்கிறார்கள். இந்த பிரசாரத்தில் நாட்டின் எந்த பகுதியும் தொடாமல் விடப்படவில்லை.

இந்த 4 வருடத்தில் நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 450 மாவட்டங்களைச் சேர்ந்த 4.5 லட்சம் கிராமங்களில் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதை 4 ஆண்டுகளில் செய்து முடிக்க முடியுமா? என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. இதனால் இந்த பகுதிகள் அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத தூய்மை பகுதியாக மாறியுள்ளது. இதுதான் இந்தியா மற்றும் அதன் மக்களின் பலம்.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான பிரசார தூதர்களாக செயல்பட்டனர். தூய்மை இந்தியா இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்கள்தான் முன்னணியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி பிரதமர் மோடியுடன் கலந்துரை யாடிய பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், “ஒரு நாட்டின் பிரஜை என்கிற முறையில் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்பது எனது கடமை. 4 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள்(மோடி) இத் திட்டத்தை தொடங்கினீர்கள். அதில் என்னையும் இணைத்துக் கொண்டேன். மும்பை கடற் கரையை சுத்தம் செய்தது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டேன். தொடர்ந்து இத்திட்டத்தில் பணியாற்றி வருகிறேன்” என்றார்.

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா பேசும்போது, “இந்தியா பலமானதாக இருக்கவேண்டும் என்றால் நமது மக்களின் சுகாதாரம் என்ற அடித்தளமும் பலமாக அமையவேண்டும். ஒவ்வொரு இந்தியனின் கனவான தூய்மை இந்தியாவை உருவாக்கிட நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன்” என்றார்.

பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

Related Posts

error: Content is protected !!