பிரதமர் மோடிக்கு கிடைச்ச பரிசுப் பொருட்கள் ஏலத்துக்கு வருது!
நம் நாட்டில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் 1947 முதல் 1962 வரை முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 68 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். 15 ஆண்டுகள் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, 3 கால கட்டங் களில், 115 நாடுகளுக்கு பயணம் செய்து, சாதனை நிகழ்த்தி உள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து, பின்னர் பிரதமர் ஆன ஒரே தலைவரான வாஜ்பாய், 48 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 10 ஆண்டுகளில் 93 நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
அதே சமயம் பிரதமர் நரேந்திரமோடியை பொறுத்தவரை, கடந்த 55 மாதங்களில், 92 நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார். பிரதமர் மோடி சென்ற நாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் அவருக்கு டர்பன் (தலைப்பாகை), சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் என இதுவரை 1800- க்கும் அதிகமான பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்களும் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுப் பொருட்களை இந்த மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு அளித்த பரிசுப் பொருட்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளோம் என்றும் இந்த பணம் முழுவதும் ஒரு உன்னதமான திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் இந்த ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அதாவது இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் அப்படியே, தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பரிசுப் பொருட்களை நேரடியாக 2 நாட்களும், இணையதளம் மூலம் 3 நாட்களும் ஏலம் எடுக்கலாம் என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை தூய்மை கங்கா திட்டத்திற்காக வழங்கப்பட்டது. இந்த பரிசுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் விரைவில் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது