பாகிஸ்தானில் ஸ்மார்ட்போன் இறக்குமதிக்குத் தடை!
பாகிஸ்தானில் இனி ஒருவருடத்திற்கு ஸ்மார்ட் போன் மற்றும் கார்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார். அதன்பின் தேவையற்ற சொகுசு ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்ப்பேன் என்றும் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் ஸ்மார்ட்போன், கார்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய பாகிஸ்தான் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். ஒரு வருடம் இதற்கான தடை ஒரு வருடம் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் ஆசாத் உமர் தலைமையில் நேற்று நடந்தது. அதில் ஸ்மார்ட் போன், கார்களுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனி பாகிஸ்தானில் உற்பத்தி ஆகும் செல்போன்களை மட்டுமே வாங்க முடியும். அதே போன்று சொகுசுக் கார், பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார தட்டுப்பாடு நிலவுகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இன்னும் அதிக டாலர்களை இழக்க நேரிடும். இது இன்னும் அந்த நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும். இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலில் இதற்காக சர்வதேச நிதி நாணயம் மற்றும் உலக வங்கிகளில் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானை கடனாளியாக்க விரும்ப மாட்டேன் என்று இம்ரான் கான் கூறியதை அடுத்து, தற்போது ஸ்மார்ட்போன், கார் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்க பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.