”சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” மோகன் பகவத் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

”சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” மோகன் பகவத் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன், “இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், தனியாக ஒரு சிங்கமோ அல்லது வங்காளப் புலியோ காட்டில் நடந்து செல்லும்போது காட்டு நாய்கள் வேட்டையாடும் கதைதான் இருந்து வருகிறது” என்று சிகாகோவில் 2-வது உலக இந்து மாநாட்டில் பேசினார். இப்படி பேசியதாக அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சுவாமி விவேகானந்தர் கடந்த 1893-ம் ஆண்டு சிகாகோவில் இந்து மதம் குறித்து உரையாற்றினார். அதன் 125-வது நினைவு நாளையொட்டி சிகாகோவில் 2-வது உலக இந்து மாநாடு நடந்தது. இதில் ஆர்.எஸ்எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: “இந்துக்களுக்கு ஒருபோதும் யாரையும் ஆதிக்கம் செய்ய வேண்டிய திட்டம் இல்லை. யாரையும் எதிர்ப்பதற்காக இந்துக்கள் வாழவில்லை. சிறு பூச்சிகள் கூட வாழ்வதற்கு நாம் அனுமதிக்கிறோம். நாம் வாழ்வதற்கு வேறு சிலர்தான் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் அவர்களைக் கையாள வேண்டும்.

இந்துக்கள் ஏன் ஆயிரம்ஆண்டுகளுக்கு மேலாகத் துன்பத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?. நம்மிடம் அனைத்து விதமான வளங்களும் இருக்கிறது, ஆனால், எதையும் நாம் முறையாகப் பழக்காமல் மறந்துவிட்டோம். ஒன்றாக இணைந்து பணியாற்றவும் மறந்துவிட்டோம். பல்வேறு துறைகளில் இந்துக்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் இந்துக்கள் ஒன்றாகச் சேர்ந்ததில்லை, ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்ததில்லை.

ஒருபோதும் இந்துக்கள் ஒன்று சேரப்போவதும் இல்லை. இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைவது என்பது மிகக்கடினமான ஒரு செயலாகும். முன்னதாக, நம்முடைய அமைப்பில் இருக்கும் சேவகர்கள் இந்துக்கள் வீடுகளுக்குச் சென்று மக்களை ஒன்றுதிரட்ட முயற்சித்தனர். ஆனால், சிங்கம் ஒருபோதும் கூட்டமாக நடக்காது என்று தெரிவித்தார்கள்.

நான் சொல்கிறேன் சிங்கங்கள் கூட்டமாக நடக்காத போது, தனியாக ஒரு சிங்கமோ அல்லது வங்காளப் புலியோ காட்டில் நடந்து செல்லும்போது காட்டு நாய்களால் வேட்டையாடக்கூடும், அழித்துவிடும். ஆதலால் இந்துக்கள் ஒன்று சேர வேண்டும்.

இந்துத்துவா என்பது குறிப்பிட்ட வழிபாட்டு முறை என்பது அல்ல, அல்லது குறிப்பிட்ட கடவுளைக் குறிக்கும் சொல்லும் அல்ல. முழுமையான உண்மையை உணர்வதாகும்” இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

இப்படி இருவேறு சமூகங்களை குறிப்பிட்டு பேசியதாக அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், அதனுடைய கொள்கை “இந்துக்களுக்கு எதிரானது,” என விமர்சனம் செய்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் இது குறித்து, “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கொள்கை இந்துக்களுக்கு எதிரானது, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஜாதிய அடிப்படையிலான அரசியலாகும். அவர்கள் எப்போது ஜாதியின் அடிப்படையில் இந்துக்களை பிரிப்பதை தடுக்கிறார்களோ அப்போது அனைத்து இந்துக்களும், பிற மதத்தை சேர்ந்த மக்களும் புலியாவார்கள்,” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சச்சின் சுவாந்த் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையானது இந்துக்களுக்கு எதிரானது. பிற ஜாதியினருக்கு மற்றும் மதங்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துவதில் அறியப்பட்டது. எந்தஒரு மதத்தையும் இதுபோன்று விவரிப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவருக்கு அவமானகரமானது,” என்று தெரிவித்துள்ளார்

Related Posts

error: Content is protected !!