பிளஸ் 2 – பத்தாம் வகுப்பு தேர்வில் இனி ரேங்க் சிஸ்டம் கிடையாது!
பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி்க்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்,
அப்போது அவர் கூறியதாவது “பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்படும்போது மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்படுவது வழக்கம். இனி அந்த முறை கைவிடப்படும், மத்திய இடைநிலைக் கல்விவாரியத்தின் சிபிஎஸ்சி ஏற்கனவே முறையை கடைப்பிடித்து வருகிறது. மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பெறும்போது, மற்ற மாணவர்கள் அதில் ஒரு மதிப்பெண் குறைந்தாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அந்த மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்,. எல்லா மாணவர்களும் சமநிலையில் நடத்தப்படவேண்டும். என்பதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பல்வேறு மாணவர்கள் தாங்கள் முதலிடத்தை பெற முடியவில்லையே என்ற ஏக்கத்தை குறைக்கும் வகையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆணை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்று கருதுகிறேன், நீண்ட நெடுங்காலமாக கனவு நிறைவேற்றப்படுகிறது. இதனை மக்களும் மாணவர்களும் வரவேற்பார்கள் மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கான ஆணை இப்போது வெளியிடப்படுகிறது.மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டும் வைத்து அவர்களை அளவிடக்கூடாது என்று அடிப்படையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழ்வழிக்கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு எண்ணிக்கை அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும், இந்த உதவித்தொகை மாணவர்களின் மதிப்பெண்ணை அடிப்படையாக கொள்ளாமல் தனி்த் திறன்களின்படி வழங்கப்படும், அதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்,
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், வீடியோ படக்காட்சிகள் மூலம் விளக்கமளித்துள்ளார், புதிய பாடத்திட்டங்கள் குறித்து முதல்வரும் சில கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார், உயர்மட்டக்குழுவினர் என்னிடமும் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர், நானும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன், இந்த புதிய பாடத்திட்டம் அரசின் பரீசிலனையில் இருக்கிறது.பிளஸ் 1 தேர்வை பொதுத்தேர்வை பொதுத்தேர்வாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறோம்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.