கரன்சி நோட்டுலே காந்தி படம் மட்டும்தான் இடம் பெறும்! – மத்திய அரசு பதில்
அன்றாடம் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்க்களில் நம் தேசப்பிதா மகாத்மாக காந்தியின் உருவப்படம் இருப்பதை நாம் அறிவோம். அதே சமயம் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நீங்கள் கவனித்துள்ளீர்களா? அதன் மூலம் இந்திய வரலாற்றை பறைசாற்றும் வகையில் எந்தெந்த ரூபாய் நோட்டுக்களில் என்னென்ன புகைப்படங்கள் உள்ளன தெரியுமா..?
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை குறிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் நமது நாட்டில் ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. பிற எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை. இந்த நிலையில், ‘மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவோ, பிற தலைவர்களின் படத்தையும் ரூபாய் நோட்டில் வெளியிடவோ அரசு திட்டம் எதுவும் வைத்துள்ளதா?’ என டெல்லி மேல்–சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து நிதித்துறை ராஜாங்க அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் பதில் அளிக்கையில், ‘‘இது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, மகாத்மா காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் மாற்றத் தேவையில்லை என முடிவு எடுத்து விட்டது’’ என குறிப்பிட்டார்.
‘‘இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 125–வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூபாய் நோட்டு அல்லது நாணயம் வெளியிடப்படுமா?’’ எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால், ‘‘இதையொட்டி அரசாங்கம் ஏற்கனவே புழக்கத்தில் விடாத வகையில் ரூ.125 நாணயம் வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 6–ந் தேதி புழக்கத்துக்காக வெளியிட்டார்’’ என பதில் அளித்தார்.
மேலும் கேள்வி நேரத்தின்போது, ‘பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிடப்படுமா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வெளியிடுவதற்காக பிளாஸ்டிக் மூலப்பொருளை டெண்டர் விட்டு கொள்முதல் செய்ய ரிசர்வ் வங்கி தீர்மானித்திருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.