27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக 27 மற்றும் 30 தேதி உள்ளாட்சி தேர்தல் !

27 மாவட்டங்களில்  இரண்டு கட்டமாக  27 மற்றும் 30 தேதி உள்ளாட்சி தேர்தல் !

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்துக் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று (வெள்ளிக் கிழமை)  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் நிறுத்தப்பட்டன.

மறு அறிவிப்பு வரும் வரை வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை காலை சுற்றறிக்கை அனுப்பியது. இந் நிலையில், தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணை சனிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை சனிக்கிழமை மாலை மீண்டும் வெளியிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை மாலை 4:30 மணியளவில் வெளியானது.

இது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திப்பின் போது, “தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும். வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் டிச. 09-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான ஆய்வு 17-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப்பெற 19-ஆம் தேதி கடைசி நாளாகும் ”என்று தெரிவித்தார்.

error: Content is protected !!