நம்ம ரயில்வே ஸ்டாஃப்களோட யூனிபார்ம் டிசைன் மாறப் போகுது!
நம் நாட்டில் 12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என்று உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் இந்திய ரயில்வே. இந்திய ரயில்களில் தினமும் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் அலுவலக ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், கார்டுகள், ரயில் ஓட்டுனர்கள், கேட்டரிங் ஊழியர்கள் என 5 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்திய கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக 4 வெவ்வேறு டிசைன்களை உருவாக்கி இருக்கிறார் பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி. இந்த டிசைன்களை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் அவர் ஏற்கனவே சமர்பித்திருக்கிறார். அதில், ஒரு டிசைனில் இந்தியாவின் கலாச்சாரம், இசை, வணிகம், பொழுதுபோக்கு ஆகியவற்றை இடம் பெறச் செய்துள்ளார். ரிது பெர்ரி வடிவமைத்துள்ள 4 டிசைன்களை பற்றிய கருத்துக்களை ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பொது மக்கள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
புதிய சீருடைக்கான டிசைன் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் நாட்டில் மொத்தமுள்ள 13 லட்சம் ரயில்வே ஊழியர்களில் 5 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக புதிய சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சீருடைகள் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.