நெடுநல்வாடை படத்தை தயாரிச்சது யார் தெரியுமா? இயக்குநர் செல்வகண்ணன் பேட்டி!

நெடுநல்வாடை படத்தை தயாரிச்சது யார் தெரியுமா? இயக்குநர் செல்வகண்ணன் பேட்டி!

மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் “நெடுநல்வாடை”. நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது. மையப் பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடித்துள்ளார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும்.

இந்தப் படத்தை, இயக்குநர் செல்வகண்ணனுக்காக நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த அவர் நண்பர்கள் 50 பேர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அவரிடம் கேட்ட போது, ““ முஸ்தபா முஸ்தபா என்று தொடங்கி “ பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுடன் பள்ளி, கல்லூரி நட்புகளுக்கு எண்ட் கார்டு விழுந்துவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருவது. அதையும் மீறி ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே வாழ்நாள் முழுக்க நம்மோடு பயணிப்பார்கள். ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழனான நான், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

2000 ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தேன். என்னுடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரு நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கிக் கொண்டு இருந்தேன்.இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் மற்றவர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்ளத் துவங்கி செய்தியைப் பரிமாற ஆரம்பித்தார்கள்.

உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நான் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். இது கதையல்ல நிஜம். உறுதிமொழியில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் ஒருவர் கூட பின்வாங்காத நிலையில், சினிமாவில் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து ‘நெடுநல் வாடை’ வரும் மார்ச் 15ல் திரைக்கு வருகிறது” என்றார்.

மேலும் படத்தின் கதை பிடித்துப் போய் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிக்கொடுத்தது கூடுதல் பலம். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கைக் கவனிக்க, ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார்.

மக்கள் தொடர்பு – மணவை புவன்.

error: Content is protected !!