எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழா! – கோலிவுட் பி.ஆர்.ஓ.க்கள் மெகா பிளான்!

எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழா! – கோலிவுட் பி.ஆர்.ஓ.க்கள் மெகா பிளான்!

ஒரு சின்ன பிளாஷ்பேக்..

1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு தகவல் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆர் எம் வீ அலுவலகம் போன போது அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. அந்நாளில் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம்

உடனே நான் ”ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” – என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” – எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார்.

அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம் தான். இந்தச் சம்பவம் மூலம் பிஆர்ஓ ஆனவர்தான் பிலிம்நியூஸ் ஆனந்தன். தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட எல்லோருடைய படங்களிலும் பணியாற்றினார். கமல், ரஜினி உள்ளிட்ட எல்லோரும் நிகழ்ச்சிகளில் இவரைப் பார்த்தால் வணங்கத் தவறமாட்டார்கள். அப்போதிருந்து திரையுலகத்துக்கெனவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். திரையுலகம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை முழுமையாகத் திரட்டியவர் அவர் ஒருவர்தான்.

அது மட்டுமின்றி வருஷா வருஷம் ஜனவரி தொடக்கத்தில் தமிழ்த்திரைப்பட புள்ளிவிவரம் என்கிற பெயரில் ஒரு சின்ன புத்தகத்தைத் தயாரித்து எல்லோருக்கும் கொடுப்பார். விக்கிபீடியா வருவதற்கு முன்பாக அவருடைய புள்ளிவிவரங்கள் மட்டுமே ஊடகங்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கே உதவியது. (இந்த பணியை தற்போது பெருந்துளசி பழனிவேல் செய்து வருவது தனி ரிப்போர்ட்)

ஆக அந்த பிதாமகன் ஆனந்தன் மூலம்தான் செய்தி ஊடகங்களுக்கும், திரைப்படத்துறைக்கும் பாலமாக இருந்து திரைப்படத்துறை குறித்தான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் என்ற அமைப்பே உருவானது.. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் , பி ஆர் ஓ-வாக அறிமுகப்படுத்திய பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது கலைமாமணி விருது கொடுத்ததும், திரைப்படம் குறித்தான பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆவணப்பணிகளுக்கு ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிதியுதவி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று அந்தத்துறையில் 60 க்கும் குறைவான மக்கள் தொடர்பாளர்கள்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் டாக்டர்கள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இணையாக 24 மணி நேரமும் அலெர்டாக இருந்து கோலிவுட் தகவல்களை அப்டேட் செய்வதில் படு கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

இதனிடையே இந்த பி ஆர் ஓ என்ற துறையை ஏற்படுத்திய எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது நூற்றாண்டு விழாவையும் சினிமா பீ ஆர் ஓ ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் விழாவையும் இதனை முறையாகப் பதிவு செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து வரும் ஜனவரி 3, 2018 அன்று முப்பெரும் விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த விழாவை, அரசியல் கலப்பில்லாமல் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சார்ந்த விழாவாகக் கொண்டாட முடிவு செய்து பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதலமைச்சர், கவர்னர் , எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இவ்விழாவில் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் திரைப்படத்துறையின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியிருக்கும் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட 76 பேரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கூடவே இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் குழுவினர் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைக்கவுள்ளார்கள். நடன அமைப்பாளர் கலா குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமாண்ட அளவில் செய்து வருகிறார்கள். இந்த முப்பெரும் விழா , எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைவாணர் பெயர் தாங்கிய அரங்கத்தில் நடைபெறவிருப்பதும், கலைவாணரின் பேத்தி பாடகி ரம்யா, கடவுள் வாழ்த்து பாடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!