சபரிமலை : பெண்களுக்கு மட்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கீடு – கேரளா அரசு தகவல்!

சபரிமலை : பெண்களுக்கு மட்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கீடு – கேரளா அரசு தகவல்!

சில பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய போலீஸார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்று நீதிமன்றம் விசாரித்த போது, சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண் களுக்காக மட்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கேரள ஐகோர்ட்டில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள்களில், சில இளம் பெண்கள் அங்குச் செல்ல முயன்றபோது, பக்தர்கள், இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை மேற் கொள்வதற்கு, கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா சஜீஸ், தான்யா விஸ், சர்வா ஆகியோ 4 இளம்பெண்கள் சார்பில் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “பெண்கள் சபரிமலையில் வழிபாடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபின்பும் எந்தப் பெண்களும் அனுமதிக்கப்பட வில்லை. நாங்களும் விரதம் இருந்து, கறுப்பு உடை அணிந்துவரத் தயாராக இருக்கிறோம். மனதார தரிசனம் செய்ய ஆவலாக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் மட்டும் சாமி தரிசனம் செய்யும் வகையில், வாரத்தில் 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாகத்” தெரிவித்தார். ஆனால் அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் தரப்பில், “வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்க வேண்டும், பெண்கள் வந்து செல்வதற்கு தேவையான வசதிகள், கழிப்பிட வசதிகள், போதுமான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் “என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து , திருவாங்கூர் தேவஸ்தானம் வரும் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நிதியை மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி” மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டதும். மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு  திருவாங்கூர் தேவஸம் போர்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!