கருணாநிதி மேலும் இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனையிலேயே இருப்பார்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும் இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனையிலேயே இருப்பார் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன், நேற்று முன்தினம் இரவு திடீரென கருணாநிதிக்கு உடல் நலம் குன்றியது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால் உடல்நிலையை சீர் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்தே அன்றைய தினம் நள்ளிரவு கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர்கள் கூறியபடியே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வரும் போது ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. சிகிச்சை பெற தொடங்கியதுமே ரத்த அழுத்தம் சீரானது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவர் களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்களுக்கு கருணாநிதி காவேரி மருத்துவ மனையிலேயே இருப்பார் என்று தெரிவித்தார்.
இதனிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப்பிரிவில் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. திறமை வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.