சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு!!

சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு!!

சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம்  நாளை – பிப்ரவரி 12ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சபாநாயர் தனபால் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டசபை வளாகத்தில் மறைந்த முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், படம் இடம்பெற்ற நிலையில் தற்போது அந்த வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்படமும் திறந்து வைக்கப்பட உள்ளது.

ஜெயலலிதா புகைப்படம் திறப்பு விழாவுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளதாக பேரவை செயலாளர் பூபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. செயல் தலைவரான மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா படம் சட்டப்பேரவையில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்பொழுது, ஊழல் குற்றவாளியின் படத்தினை திறப்பதற்கு சபாநாயகருக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது. ஜெயலலிதா படத்தினை திறந்து வைத்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்க கூடாது என கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தினை திறப்பது கண்டனத்திற்குரியது. அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும் சபாநாயகர் ஊழல் குற்றவாளியின் படத்தினை திறப்பது மிகப்பெரும் இழுக்கு என கூறினார். ஜெயலலிதாவின் படம் திறக்க கூடாது என்ற வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவசர கதியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது கவனிக்கப்பட வேண்டியது. அதனால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்க கூடாது என கூறியுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில், மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. மேலும் தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து தமிழக சட்டசபை செயலாளர் க.பூபதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ஜெயலலிதாவின் திருவுருவப்படம் பிப்ரவரி 12-ந் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் திறந்து வைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சட்டசபை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை சபாநாயகர் ப.தனபால் திறந்து வைப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

படத்திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை உரை நிகழ்த்துவார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை உரையாற்றுவார். சபாநாயகர் ப.தனபால் விழாப்பேருரை நிகழ்த்துவார். முன்னதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசுவார். இறுதியில் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் நன்றி கூறுவார்.

இந்த விழாவுக்கு முன்னாள் சபாநாயகர்கள், சட்டசபையின் முன்னாள் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அரசு அலுவலர் மூலம் நேரடியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மாகாந்தி உள்பட 10 தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் வரைபடங்களாகும். அவை 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டவை. அதுபோல் ஜெயலலிதாவின் முழுஉருவ வண்ணப்படமும் அதே அளவில் வரையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் 6 பாகங்கள் உள்ளன. இதில் முதலாவது பாகத்துக்கும், இரண்டாவது பாகத்துக்கும் இடையே பின்பக்கத்தில் இடைவெளியை ஏற்படுத்தி அதில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மாட்ட இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின் பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரை சந்தித்து பேசிய போது, தமிழக சட்டசபையில் நடக்கும் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில், படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை. மத்திய அரசில் இருந்தும் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!