ஜாக்பாட் – விமர்சனம்!

ஜாக்பாட் – விமர்சனம்!

‘சிரிப்பு என்பது கலை

சிரிப்பு என்பது கருவி

சிரிப்பு என்பது மந்திரம்

சிரிப்பு என்பது மகத்துவம்

சிரிப்பு என்பது மருத்துவம்

இப்படியாப்பட்ட சிரிப்பின் வகைகள் எத்தனையென்று தெரியுமோ?

அசட்டு சிரிப்பு

ஆணவ சிரிப்பு

ஏளனச் சிரிப்பு

சாககச் சிரிப்பு

நையாண்டி சிரிப்பு

புன் சிரிப்பு

மழலை சிரிப்பு

நகைச்சுவை சிரிப்பு

தெய்வீகச் சிரிப்பு

புருவச் சிரிப்பு

காதல் சிரிப்பு

வில்லங்க சிரிப்பு

ஏழையின் சிரிப்பு.. என்பது போன்ற விவரங்களையெல்லாம் ஏதேதோ ஊடக வழியாக தெரிந்தி ருந்தாலும் சிரிப்பின் மகிமை இம்புட்டா?  என்றும் இதையும் தாண்டிய சிரிப்பு இருக்குதா? ஆம் என்றால் அப்படியாப்பட்ட சிரிப்பு எப்படி இருக்கும்? என்று சந்தேகம் கொள்வோரும் காணத் தகுந்த படம்தான் ’ஜாக்பாட்’.

இதில் ஒரேயொரு குறை தயாரிப்பாளராக ஆகி இருக்க வேண்டிய ஜோதிகா மெயின் ரோலில் நடித்து விட்டார்..ஜாக்பாட் பட ஹீரோவாக நடிக்க வேண்டிய சூர்யா இதன் தயாரிப்பாளராகி விட்டார். ஆனாலும் ஆடியன்சை சிரிக்க வைக்க இயக்குநர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பதுதான் சோகம்.

புரொடீயூசர் சூர்யாவின் ரியல் ஒய்ஃப்பான ஜோதிகா பித்தலாட்டம் செய்து பிழைப்பு நடத்தும் அக்‌ஷ்யா என்னும் ரோலில் படம் முழுக்க வருகிறார். கூடவே  ஜோதிகாவை சின்ன வயதில் இருந்து தத்து எடுத்து வழக்கும் ரேவதியும் தகிடுத்தத்தம் செய்து வாழ்க்கையை ரிச்சாக ஓட்டுபவர்கள். (இவர்கள் வீட்டில் உள்ள சோபாவும், 42 இஞ்ச் டிவியும் பார்த்தால் பெருமூச்சு வரும்).,இந்த இருவரும் ரஜினி படம் ஒன்று பார்க்க போன இடத்தில் இன்ஸ்பெக்டரை அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தியதால் ஜெயிலுக்கு போகிறார்கள்.அங்கு அடாவடி செய்யும் பெண் வார்டி (பெண்பால்) ஒருவரை ரஜினி பாணியில் தட்டிக் கேட்கிறார். அதில் மனம் குளிர்ந்த அதே ஜெயிலில் இருக்கும் இட்லி வியாபாரம் செய்து குற்றவாளியான சச்சு தன்னிடம் ஒரு அட்சய பாத்திரம் ஒன்று கிடைத்ததாகவும், அது இப்போது தாதா என்று சொல்லிக் கொள்ளும் ஆனந்த்ராஜ் வீட்டில் புதைக்கப் பட்டிருப்பதையும் சொல்லி அதை வைத்து நாட்டுக்கு நல்லது செய்யுங்க என்று சொல்கிறார். அதை அடுத்து அந்த பாத்திரத்தைக் கைப்பற்ற முயல்வதில் ஏற்படும் அது இது எது என்பதுதான் ஜாக்பாட் கதை.

இந்த படம் சூர்யாவுக்கு ஜோதிகா கொஞ்சமும் சளைத்தவரில்லை என்று காட்ட எடுக்கப் பட்ட என்பதாலோ என்னவோ சூர்யாவே ஜோதிகா வேஷம் போட்டு வந்தது போலவே ஏகப்பட்ட காட்சி அமைப்புகள்.. அதை ஜோ-வும் நன்றாக் புரிந்து இந்த ரோலுக்காக பெரிதும் பாடு பட்டிருக்கிறார், சூர்யா ரேஞ்சில் ஓங்கி அடிச்சா (ஒன்றரைக்கு பதிலா) மூணு டன் வெயிட் பார்க்குறியா என்று சீரியஸாக ஆக்ரோஷமாக குரல் கொடுத்து நிஜமாகவே பத்திருபது பேரை அடித்து துவம்சம் செய்கிறார். கூடவே ஆடுகிறார். பாடுகிறார்.ஆனாலும் முழுமையாக ஈடுப்பட்டிருப்பதால் ரசிக்க வைக்கிறார். இவருடன் மண்வாசனை ரேவதியும் தன் வயதை பொருட்படுத்தாமல் ஃபைட் , டேன்ஸ் என்று அதகளப்படுத்துகிறார். ஆனந்தராஜ் அடிசினலாக ஒரு லேடி போலீஸ் கதாபாத்திரத் திலும் வந்து நிஜமாகவே அக்குளில் கை விட்டு சிரிக்க வைக்கிறார்.. இவருடன் மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, கிங்ஸ்லி, பழைய ஜோக் தங்கதுரை என்று எல்லோரும் கிடைக்கிற கேப்பில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். கூடவே சமுத்திரக் கனி, தேவதர்ஷினி, மைம் கோபி, அந்தோணி தாசன், சச்சு, நண்டு ஜெகன், செம்மலர் அன்னம், சூசன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின் என்று லிஸ்ட் பெரிசு.. அவர்களும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.

ஏகப்பட்ட இடங்களில் சலிப்பைக் கொடுக்கு படத்தில் குட்டிப் பையன் மூலம் 100 ரூபாய் நோட்டு காய்க்கும் செடி மூலம் ஒரு மெசேஜ் தொடங்கி, ஜோ-வும், ரே-யும் கொள்ளையடிப்பதின் பின்னணி பள்ளிக் கல்விக் கட்டண உயர்வுதான் என்று சுட்டிக் காட்டுவதுடன், ஜோ-வால் அம்மணமான உடலை மறைக்க செடி, கொடியை வைத்து வரும் ஆனந்த்ராஜ் ரியாக்‌ஷன், இதை எல்லாம் தாண்டி, ஒரு புற்றுக் கோவிலைத் தேடிச் செல்லும்போது தப்புத்தப்பாக எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை படித்து, விளக்கம் தரும் காட்சிகள் என ஆரம்ப பேராவில் சொன்ன சில வகை சிரிப்புகளை மெய்யாலுமே கொடுக்கிறார் இயக்குநர் என்பது என்னவோ உண்மை

அதே சமயம் நம் பக்கத்து சீட் தம்பி சொன்னது இதுதான், ‘குலேபகாவலி’ படம் ஹிட்டாகியிருந்தால் இந்த படத்திற்கு ‘குலேபகாவலி 2’ அப்படீன்னுதான் இந்த டைரக்டர் கல்யாண் தலைப்பு வைத்து இருப்பார், ஆனா அப்படம் தோல்வி என்பதாலும், இதில் ஜோதிகா நடித்திருப்ப தாலும் புதிய தலைப்பை தேர்வு செஞ்சிருக்கார். தலைப்புதான் புதுசு ஆனா கதை என்னவோ ‘குலேபகாவலி’யில் புதையல் தேடுவது மாதிரியே கொண்டு போனவர் ரேவதி நேம்-முக்கு கொஞ்சம் புதுசா யோசிக்கா மல் விட்டு விட்டார். ஆனாலும் இயக்குநரின் அம்புட்டு வீக்னெஸையும் மறக்கடிக்கப்பது போல் ஜோதிகாவின் ஜாலி பர்ஃபாமென்ஸூக்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்.

மார்க் 3 / 5

error: Content is protected !!