இஸ்ரோ – உலக சாதனை!

இஸ்ரோ –   உலக சாதனை!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் திங்கள்கிழமை காலை 9.28 மணிக்கு தொடங்கப்பட்டது.

isro feb 15

இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து செல்கிறது. கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் எடை 714 கிலோ ஆகும். ஒவ்வொரு நானோ செயற்கைக்கோளும் 5 முதல் 10 கிலோ வரை எடை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

கார்டோசாட்-2 செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்கள் படப்பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும் உதவிகரமாகவும், சிறப்புக்குரியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை ஆகும். இந்தியா தவிர அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது 104 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதோடு இது புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!