தனிமைப்படுத்தப்படும் சீனியர் சிட்டிசன்கள்! – சமீபத்திய ஆய்வு முடிவு அதிர்ச்சிகள்!

தனிமைப்படுத்தப்படும் சீனியர் சிட்டிசன்கள்! – சமீபத்திய ஆய்வு முடிவு அதிர்ச்சிகள்!

வெளிநாடுகளில் முதியோருக்கு ஓரளவு மரியாதையும் பாதுகாப்பும் உள்ளது. ஆனால் இந்தியாவில் முதியோர்களை கவனிக்காமல் இருப்பது, மனதளவில் துன்புறுத்துவது, திட்டுவது, அடிப்பது போன்றவை அதிகமாக நடக்கிறது. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். இவர்களில் 32 சதவீதம், அதாவது மூன்றில் ஒரு முதியவர் கொடுமைப்படுத்தப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வில் 56 சதவீதம் முதியோர்கள் மகன்களாலும், 23 சதவீதம் முதியோர்கள் மருமகளாலும் பல்வேறு கொடுமை களுக்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்தது. அத்துடன் அண்மையில் நட்ந்த ஓர் ஆய்வில் மருமகளைப் போலவே மகள்களும் முதியோர்க ளை கொடுமைப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. பணம் மற்றும் சொத்துக்காக முதியோர்கள் அதிகம் துன்புறுத்தப்ப டுகின்றனர். அதே போல் வருமானம் இல்லாத, உடல்நிலை சரியில்லாத முதியோர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று சீனியர் சிட்டிசன் டாக்டர் வி. எஸ். நடராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதா 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு விநாடியும் மூத்த குடிமக்கள் தனிமையில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது மூத்த குடிமகனுக்கும் தனிமையிலிருந்து தப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ”மாறும் தேவைகள் மற்றும் இந்தியாவில் முதியோர் உரிமைகள்” என்ற புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது இந்தியா முழுவதும் 15 ஆயிரம் மூத்த குடிமக்களிடம் அகர்வால் ஃபவுண்டேஷன் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 47.49 சதவீதம் மூத்த குடிமக்கள் தனிமையில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதே சமயம் நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இங்குதான் 5000த்திற்கு 3,205 மூத்த குடிமக்கள் தனிமைத் துயரில் வாடுகிறார்கள். நகர்ப்புறப் பகுதிகளில் 64.1 சதவீதம் மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் கிராமப் புறங்களில் 39.19 சதவீதம் (10 ஆயிரத்திற்கு 3919 கிராமப் பகுதியச் சார்ந்த மூத்த குடிமக்கள்) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இன்றைய சமுதாய மாற்றத்தில் கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிவிட்டன. வயதான பெற்றோரைப் பாதுகாப்பது தங்களது கடமை என இளைஞர்கள் நினைப்பதே அபூர்வமாகிவிட்டது.மாறும் சமுதாய வாழ்க்கை முறை, நகர மயமாக்கல் ஆகியவை முதியோர்களிடம் ஆதரவற்ற நிலையை உருவாக்கி வருகிறது. “பெட்டியிலே பணமில்லை… பெத்த பிள்ளை சொந்தமில்லை’ என்ற நிலையில்தான் உள்ளனர்.இது தவிர முதியோர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் பல. குறிப்பாகக் கண்புரை நோய், மூட்டு வலி, ஆஸ்மா, இதய நோய், நீரிழிவுநோய், இரத்த அழுத்தம்,புரோஸ்டேட் வீக்கம், மன அழுத்தம், மனச் சோர்வு, காது கேட்புத் தன்மை குறைவு, நினைவாற்றல் குறைவு ஆகிய நோய்களால் பாதிக்கப்படும் முதியோர்கள் அதிகம்.இந்த நோய்களால் அவர்களது அன்றாடச் செயற்பாடு மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. இது இன்றைய இயந்திர வாழ்க்கை, குடும்பச் சூழ்நிலையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது என்று முன்னரே தெரிந்த நிலையில் வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளிய காரணங்கள் என்ன? என்ற கோணத்திலும் ஆய்வு சென்றது.

இந்த கணக்கெடுப்பின்படி பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தனிமையிலோ அல்லது துணையுடனோ வாழ்ந்து வருபவர்கள். மற்றவர்களுக்காக இப்படி இருப்பவர்கள்.குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள் 27.3 சதவீதம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் 19.06 சதவீதம். தனிமையை எதிர்கொள்ளவேண்டியநிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் 12 சதவீத மூத்தக்குடிமக்கள். 36.78 சதவீதம் மூத்தக்குடிமக்கள் தனித்து வாழவோ அல்லது மனைவியுடன் தனிமையில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதாகவோ தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஐந்தாவது முதியவருக்கும் சில வகை மனநல ஆலோசனைகள் எவ்வாறு தேவைப்ப டுமென ஆய்வு தெரிவிக்கிறது. தர்போது நடந்த ஆய்வின்போது பதிலளித்த 15,000 மூத்தக் குடிமக்கள் மொத்தத்திலும் 2,955 பேர் தங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ ஆலோசனையை நாடியுள்ளனர். ஆனால் அதன்பிறகு மேலும் உளவியல் சிக்கல்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் (63.86 சதவீதம்) கிராமப்புறப் பகுதிகளைவிட (36.14 சதவீதம்) மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 300 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மூத்தக் குடிமக்களின் அவலநிலையை புள்ளிவிவரங்களோடு அறியமுடிந்தது குறிப்பிடத்தக்க்து.

error: Content is protected !!