அமெரிக்கா- வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா போய் கல்வி கற்போர் எண்ணிக்கையில் 2–வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதற்கு காரணம் அமெரிக்காவில் 2 பட்டபடிப்புகளை ஓரே நேரத்தில் படிக்கலாம். அதில் என்ன சிறப்பு என்றால் உதாரணமாக ஒருவர் பி.எஸ்சி. இயற்பியல் படிப்பையும், ஆங்கிலம் படிப்பையும் படிக்கலாம். மேலும் பட்டப்படிப்பு படிக்கும் போதே அந்த மாணவ–மாணவிகள் ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம்.
இதனால் இந்தியாவில் இருந்து 2015–2016–ம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்க 1 லட்சத்து 65 ஆயிரத்து 918 மாணவ–மாணவிகள் சேர்ந்துள்ளனர். இது 2014–2015–ம் ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிப்பவர்களில் 36 சதவீதம் பேர் பொறியியல் படிப்பையும், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை 35 சதவீதம் பேரும் படிக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர்கள் ஒரு படிப்பை மட்டும் பெரும்பாலும் படிப்பதில்லை. அவர்கள் இருவித படிப்பை ஓரே நேரத்தில் படிப்பார்கள். அப்படி அங்கு சென்று படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா போய் செட்டிலாகி விட்ட இந்திய வம்சாவளி மாணவ, மாணவியர்கள் பலரும் பல்வேறூ வழிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவதும் வாடிக்கை
அந்த வரிசையில் அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் மேடிசன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவர் சரத் நாராயண் கலந்து கொண்டார். அவர் இறுதிப்போட்டியில் தனக்கு அடுத்த படியாக வந்த அலெக்ஸ் பிஸ்தால், மைக்கேல் போரெக்கி ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.67 லட்சம்) பரிசை அவர் பெற்றார். இந்த போட்டியை வாரம் தோறும் 2 கோடியே 30 லட்சம் பேர் டெலிவிஷனில் கண்டு களித்தனர். இரண்டாம் இடத்தை அலெக்ஸ் பிஸ்தாலும், மூன்றாவது இடத்தை மைக்கேல் போரெக்கியும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சரத் நாராயண், “நான் எனது குடும்பத்தினருடன் ஐரோப்பா செல்ல விரும்புகிறேன். இத்தாலி அல்லது ஜெர்மனிக்கு செல்லக்கூடும். இதில் பெரும்தொகை வரிக்கும், கல்லூரி டியூசன் கட்டணத்துக்கும் போய் விடும். இந்த பரிசை பெற்றதால் எனக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. என்னை நான் ஆனந்த அதிர்ச்சிக்கு உட்படுத்த முடியும் என புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.