அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை சொல்லி விட்டேன்! – கமல் பர்த் டே தகவல்!.

அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை சொல்லி விட்டேன்! – கமல் பர்த் டே தகவல்!.

நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடி வந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் கமல் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஒருமணி நேரம் தாமதமாக கமல் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டதாகத் தெரிவித்த கமல் செய்தியாளர்களை காக்க வைத்ததற்காக வருத்தம் தெரிவித்தார். அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், சில ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாவதாகக் கூறினார். தனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதால் அறிஞர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியல் களத்திற்கு செல்ல இருப்பதால் மக்களை சந்தித்து முதலில் தான் பேச வேண்டியிருப்பதாகத் தெரிவித்த அவர், அனைத்து தரப்பு மக்களையும் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகக் கூறினார். தன்னை மக்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்று அவர்களை நேரில் சந்தித்து கூற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக ‘மையம் விசில்’ என்ற பெயரிலான APP-ஐயும் கமல் அறிமுகம் செய்துவைத்தார். தீயவை நடக்கும் போது பயன்படும் ஒரு கருவியாக தனது ‘மையம் விசில்’ APP இருக்கும் என்ற அவர், அதனை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் தீயவைகளை சுட்டிக்காட்ட முடியும் என்று தெரிவித்தார். மையம் விசில் APP மூலமான மக்கள் தொடர்பு தொடர்ச்சியான ஒரு செயல்முறை என்ற அவர், இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை, பிரச்சனைகளை நேரடியாக தன்னிடம் தெரிவிக்க முடியும் என்று கூறினார். 20 முதல் 25 பேர் மையம் விசில் APPஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்து தீவிரவாதம் தொடர்பான கருத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உண்மையாக எதிர்கொள்வேன். இந்துத்துவா தொடர்பாக உண்மையை கூறியதற்கு தண்டனை அளித்தால் அதனை அனுபவிக்கவும் தயார். என்னை இந்துமத விரோதி என்று தற்போதும் விமர்சிக்கின்றனர். நான் இந்துமத விரோதி இல்லை. இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எந்த மதமானாலும், எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது எனது உரத்த குரல்.

நான் பிறந்தது, பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியது தவிர பிராமண சமூதாயத்தை நான் தேடிப்போனதே கிடையாது. எல்லா சமுதாயத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். சமூகம் பார்த்து நட்பு கொள்வது கிடையாது. இந்து விரோதி என்று சித்தரிக்கப்படுகிறேன். நான் பிறந்த குலத்தில் இருந்து விலகி வந்தவன். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். நாத்திகன் என்று என்னை அழைப்பதை ஏற்கவில்லை; பகுத்தறிவாளன் என்பதையே விரும்புகிறேன்.

என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன். ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயமாக வர முடியாது. அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை சொல்லிவிட்டேன். எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!